முல்லைத்தீவில் மக்களின் எதிர்ப்பு நடவடிக்கையால் காணி அளவீட்டு பணி இடைநிறுத்தம்
முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் சிலாவத்தை பகுதியிலுள்ள காணியில் அளவீட்டு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் இன்று (17.06.2025) பதிவாகியுள்ளது.
கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளரினால் காணி உரிமையாளர்களுக்கு காணி சுவீகரிப்பு தொடர்பிலான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
(சிலாவத்தை கிராம அலுவலகர் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் இலங்கை கடற்படைத்தளம் அமைந்திருக்கும் காணியானது காணி கையகப்படுத்தல் சட்டத்தின் அத்தியாயம் 460இன் 5ஆவது பிரிவின் கீழ் இன்று நிலஅளவை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை அரச நில அளவையாளர் கி.கிருஸ்ணராசா அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.)
அதிகாரிகள் வருகை
இந்த நிலையில் கரைத்துறைப்பற்று பிரதேச செயலக அதிகாரிகள், அரச நில அளவையாளர் கி.கிருஸ்ணராசா, சிலாவத்தை கிராம சேவையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குறித்த இடத்திற்கு வருகை தந்த போது காணியின் உரிமையாளர்கள் மற்றும் மக்கள் ஒன்றிணைந்து தங்கள் எதிர்ப்பு நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
இதனால் காணி அளவீட்டுப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட சிலாவத்தை கிராமத்தில் சிலாவத்தை கடற்படை முகாம் 2009ஆம் ஆண்டு போருக்கு பின்னர் நீண்ட காலமாக அமைந்துள்ளது.
இந்த காணியானது நான்கு பேருக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் என மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
சுனாமியில் அழிந்த ஆவணங்கள்
1981ஆம் ஆண்டு தொடக்கம் இந்த காணியில் தங்கள் வசித்து வந்துள்ளதாகவும், 2004இல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது காணிக்கான ஆவணங்கள் அனைத்தும் அழிந்துள்ளதாகவும், அதன் பின்னர் தமக்கான எந்த ஆவணமும் இல்லாத நிலையில் 2009ஆம் ஆண்டு போருக்குப் பின்னர் குறித்த காணியில் கடற்படையினர் முகாமைத்து இருந்துள்ள நிலையில் இந்த காணியினை உரிய உரிமையாளர்களுக்கு வழங்க கோரி பல தடவைகள் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்தும் எதுவும் பலனளிக்காத நிலை காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இவ்வாறான சூழலில் இந்த காணியை சுவீகரிக்க உள்ளதாக வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் காணிக்கான அளவீட்டு பணிகள் இன்று மேற்கொள்ளப்பட்ட நிலையில் மக்கள் எதிர்ப்பினை தொடர்ந்து பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.









