தமிழர் பகுதியில் வீட்டுக்குள் புகுந்து பெண்ணை தாக்கிய மர்ம நபர்.. தீவிர விசாரணையில் பொலிஸார்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் தனிமையில் வசித்து வந்த குடும்ப பெண் ஒருவர் மீது, வீடு புகுந்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று (08.02.2026) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதுக்குடியிருப்பில் அதிகாலை 1 மணியளவில், வீட்டினுள் குறித்த பெண்ணும் மூன்று பிள்ளைகளும் உறங்கி கொண்டிருந்துள்ளனர்.
அடையாளம் தெரியாத நபர்
இதன்போது, வீட்டு கூரையினை பிரித்து உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், குறித்த பெண் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்குள்ளான பெண் கூக்குரல் இட்டதனையடுத்து அயலவர்கள் உடனடியாக சென்று அவரை காப்பாற்றியுள்ளனர்.
பின்னர் அவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தீவிர தேடுதல்
இச்சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதனை தொடர்ந்து, புதுக்குடியிருப்பு பொலிஸார் தடயவியல் பொலிஸார் மற்றும் மோப்ப நாயின் உதவியுடன் சம்பவ இடத்தில் தீவிர தேடுதல் மற்றும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணைகளின் போது, வீட்டிற்கு அருகாமையில் வசிக்கும் நபர் ஒருவர் விசாரணைக்காக பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மேலும், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தடி ஒன்று தடயப்பொருளாக பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
35 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாரே குறித்த தாக்குதலுக்கு இலக்கானவராவார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.













