பல தடவைகள் எடுத்துரைத்தும் வெற்றிடங்கள் நிரப்பப்படவில்லை என குற்றச்சாட்டு
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் நிலவும் விசேட வைத்திய நிபுணர் பற்றாக்குறை தொடர்பில் பல தடவைகள் எடுத்துரைத்தும் இதுவரை வெற்றிடங்கள் நிரப்பப்படவில்லை என முல்லைத்தீவு மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்க தலைவர் க.வசுதேவா (K. Vasudeva) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் மாவட்ட மருத்துவமனை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்த சந்தர்ப்பத்திலேயே அவர் குறித்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஒரு சத்திரசிகிச்சை நிபுணர்
கூட கடமையாற்றவில்லை. இரண்டு சத்திரசிகிச்சை நிபுணர்கள் கடமையில் இருக்க வேண்டும்.
ஆனால் இதுவரை எவரும் இல்லை. மாவட்ட மருத்துவமனையினை நாடிவரும் நோயாளர்கள் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா மருத்துவமனைகளுக்கே மாற்றம் செய்யப்படுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
சத்திரசிகிச்சை நிபுணர்கள் இல்லாத நிலையில் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றம் செய்யும் போது ஏற்படும் காலதாமதங்களால் எதிர்வரும் காலங்களில் நோயாளிகள் இறக்க நேரிடலாம்.
காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் விசேட கதிரியக்க நிபுணர்கள் இருவர் கடமையில் இருக்க வேண்டும். ஆனால் ஆறு மாதங்களாக ஒரு வைத்திய நிபுணரும், ஒரு விசேட கதிரியக்க வைத்திய நிபுணரும்கூட கடமையில் இல்லை. இவர்கள் இருவருமே காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் முக்கியமானவர்கள்.
எனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் காயமடைந்தவர்கள் உள்ளிட்ட ஏனைய உடனடி சிகிச்சை பெற வேண்டியவர்களுக்கு சிகிச்சை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மாவட்ட மருத்துவமனையில் விசேட குருதி நோயியல் வைத்திய நிபுணர், முறிவு சத்திரசிகிச்சை நிபுணர், மனநல மருத்துவ நிபுணர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு இதுவரை நியமிக்கப்படவில்லை.
இவ்வாறு பல வைத்தியர் பற்றாக்குறையுடன் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை இயங்கி வருகின்றது. இதனால் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.
எனவே மாவட்ட மருத்துவமனையில் நிலவும் விசேட வைத்தியர்களின் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யுமாறு பல்வேறு தடவைகள் கோரிக்கைக்கள் முன்வைத்துள்ள போதும் அவை நிவர்த்தி செய்யப்படவில்லை.
இவற்றை நிவர்த்தி செய்யாத பட்சத்தில் மாவட்டத்தில் வாழும் மக்களின் நலன் கருதியும் நோயாளர்கள் நலன் கருதியும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்ல நேரிடும் எனவும் அறிவித்துள்ளார்.
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
சாணக்கிய நீதிப்படி கணவன் மனைவியிடம் மறைத்து வைக்க வேண்டிய 4 முக்கிய விடயங்கள்... என்னென்ன தெரியுமா? Manithan