திருடன் என நினைத்து பிரதேசவாசிகள் விரட்டிச் சென்ற நபர் ஆற்றில் குதித்து பலி
திருடன் என நினைத்து பிரதேசவாசிகள் விரட்டிச் சென்ற நபர் ஒருவர், காலி கொஸ்கொட ஆற்றில் குதித்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த நபர் யார் என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் அவர் சுமார் 28 வயது மதிக்கத்தக்கவர் எனவும் கொஸ்கொட பொலிஸார் கூறியுள்ளனர்.
உயிரிழந்த நபர் வைத்திருந்த பை ஒன்றில் இரண்டு திருப்புளிகள்(screwdriver) இருந்துள்ளன. இந்த நபரை சிலர் விரட்டி வந்துள்ளதுடன் அவர்களிடம் இருந்து தப்பிக்க அவர் ஆற்றில் குதித்துள்ளார்.
ஆற்றில் குதித்த நபர் காணாமல் போன நிலையில், கடற்படை சுழியோடிகளின் உதவியுடன் சடலத்தை மீட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் பலப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.