உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; சூத்திரதாரிகளுக்கு தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் - கிண்ணியா நகரசபை தவிசாளர்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு நிச்சயமாக அவர்களுக்கு சட்டரீதியான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என கிண்ணியா நகரசபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகங்களுக்கு நேற்று (15.06.2026) விடுத்துள்ள அறிக்கையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும், 2019.04.21ஆம் திகதிய தற்கொலைதாரிகளின் திட்டமிட்ட தாக்குதல் காரணமாக எந்த அடிப்படைகளும் இன்றி பல நூறு கிரிஸ்தவ, கத்தோலிக்க மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டதும் சம்பந்தமே இல்லாமல் முஸ்லிம் சமூகம் இனவாதிகளாக காட்டப்பட்டு குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்பட்டதும், தாக்கப்பட்டதும் என்றுமே மறக்க முடியாத வேதனையான சம்பவமாகும்.
அரசாங்கம் எடுக்கின்ற நடவடிக்கை
அரசியல் சுயநலங்களுக்காக வரலாற்றிலே மறக்க முடியாத இப்பாதக செயல்களை அரங்கேற்றிய கொடூரர்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய தண்டனைகள் வழங்க வேண்டும் என்பதை கத்தோலிக்கர்களும், முஸ்லிம்களும் நாட்டின் நட்பிரஜைகளும் முன்மொழிந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில் அரசாங்கம் எடுக்கின்ற அனைத்து நடவடிக்கைகளையும் பாராட்டுவதோடு பூரண ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம்.

இஸ்லாமிய சமூகத்தின் மார்க்க அறிஞர்கள், சட்டத்தரணிகள், கல்விமான்கள், அரசியல் தலைவர்கள் என பலரையும் கைது செய்து அநியாயமாக சிறை படுத்தி பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்கள், பொருளாதாரம், உயிர்கள் என அனைத்துமே அழிக்கப்பட்டு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமுமே தனிமைப்படுத்தப்பட்ட அத்தருணத்தை வரலாறு மறக்காது.
படிப்படியாக நீண்டு கொண்டிருக்கும் குற்றவாளிகளின் பட்டியல்களின் அடிப்படையில் பிரதான சூத்திரதாரியும் கண்டுபிடிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப்படுகின்ற போது எதிர்காலத்தில் இவ்வாறானதொரு சம்பவத்தை மீண்டும் நிகழாதவாறு பாதுகாக்கும் எனவும் இன நல்லுறவும் வளர்வதோடு நாடும் சுபீட்சமடையும் எனவும் கூறியுள்ளார்.
விவசாயிகளின் துயர் எப்போது துடைக்கப்படும்?
உற்பத்தியை அதிகரித்து உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விவசாயிகளின் துயர் துடைக்கப்பட வேண்டும் என கிண்ணியா நகரசபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று (15.06.2026) மாலை வழங்கப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தமது வாழ்வாதாரத்தை தேடுவதற்காக அடகு வைத்து, கடன் பட்டு விவசாயத்தை செய்கின்றார்கள். ஆகாயத்தை தொட்டு நிக்கும் பசளை விலை, களை நாசினி, கிருமிநாசினி விலைகள் உழவு இயந்திர, அறுவடை இயந்திர கூலிகள், சம்பள ஏற்றம் என்பவற்றால் பாதிக்கப்படுகின்ற விவசாயிகள் ஒரு கிலோகிராம் நெல்லை உற்பத்தி செய்ய 120 ரூபா வரை செலவு செய்கின்றனர்.
அதே விவசாயிகள் ஒரு கிலோகிராம் நெல்லை 82 ரூபாவுக்கு விற்றால் எவ்வாறு அவர்களால் வாழ முடியும். எனவே விவசாயிகளின் உற்பத்திகளுக்கு நியாயமான விலை நிர்ணயத்தை செய்து நெற்களை கொள்வனவு செய்ய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மாறாக இதே நிலை நீடிக்குமாக இருந்தால் கோட்டா அரசாங்கத்தில் நடந்தது போன்று தொடர் போராட்டங்களும் ஆட்சி மாற்றத்திற்கான ஏற்பாடுகளும் விவசாயிகளினால் ஆரம்பிக்கப்படும் என்கின்ற எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.