கிண்ணியா மாஞ்சோலை கிராம உத்தியோகத்தர் பிரிவு கொவிட் பரவல் காரணமாக முடக்கம்
திருகோணமலை-கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலை கிராம உத்தியோகத்தர் பிரிவு இன்று மாலை 6 மணிமுதல் கொவிட் பரவல் காரணமாக முடக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி தெரிவித்துள்ளார்.
மாஞ்சோலை கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள ஹிஜ்ரா வீதி, அஹமட் லேன், சந்திப்பள்ளி வீதி,கரையோர வீதி மற்றும் அல்ஹிரா வீதி போன்ற வீதிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாகவும், யாரும் வெளியே செல்லவோ அல்லது உள் நுழையவோ முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிண்ணியா பிரதேசத்தில் கடந்த டிசம்பர் 20ம் திகதி முதல் மொத்தமாக 37 கொரோனா தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ள நிலையில், இன்று மாத்திரம் எட்டு பேர் இணங்காணப்பட்டுள்ளதாகவும், அதில் நான்கு பேர் மட்டக்களப்பில் தாதியர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் எனவும் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மாஞ்சோலை கிராம உத்தியோகத்தர் பிரிவில் 817 குடும்பங்களைச் சேர்ந்த 2900 நபர்கள் வசித்து வருவதாகவும் பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் நலன் கருதி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும்,கொவிட் பரவலை தடுப்பதற்கு அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும், அவசர மருத்துவ சேவைகள் தேவைப்படின் கிராம சேவையாளர், பொலிசார் மற்றும் 1990 போன்ற இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும் எனவும்பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.