கிண்ணியாவில் நடந்த கொடூரம்: வீடு புகுந்த இருவரின் வெறிச்செயல்
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமாவாஜதீவு கிராம சேவகர் பிரிவில் 28 வயதுடைய குடும்பஸ்தவர் ஒருவர் கழுத்தில் வாளால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று (28) அதிகாலை 02.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொலை சம்பவம்
சீரற்ற வானிலையும் மின்சார துண்டிப்பையும் பயன்படுத்தி இந்த கொலையை செய்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் கொல்லப்பட்டவர் அதே பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சு.பர்சாத் (வயது 28) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட பர்சாத், தனது மனைவி மற்றும் பிள்ளையுடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சமயத்தில், கதவை உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இருவரே இந்த கொலையைச் செய்துள்ளனர்.
கொல்லப்பட்டவரின் மனைவி தற்போது கர்ப்பிணியாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலதிக விசாரணை
சம்பவம் குறித்து தகவல் அறிந்த கிண்ணியா பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

அத்துடன், தடயவியல் பொலிஸாரும் வருகை தந்து பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இக்கொடூரச் செயலில் ஈடுபட்டவர்களைத் தேடி பொலிஸார் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியுள்ளனர்.


