கிண்ணியா குரங்குபாஞ்சான் காணி விவகாரம்: எம்.பி தௌபீக் கள விஜயம்
திருகோணமலை - கிண்ணியா குரங்கு பாஞ்சான் இராணுவ முகாம் சர்ச்சை தொடர்பில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த களவிஜயம் நேற்று (06.10.2023) முன்னெடுக்கப்பட்டிருந்தது.
திருகோணமலை - கிண்ணியா குரங்கு பாஞ்சான் இராணுவ முகாம் காணிக்குள் சென்று வரும் பௌத்த மதகுரு தலைமையிலான குழுவினரால் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சமடைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

பௌத்தப்பிக்கு உட்பட ஐவர் கார் ஒன்றில் கடந்த 03, 04 ஆம் திகதிகளில் குரங்கு பாஞ்சான் முகாமுக்குள் வருகை தந்து செல்வதாக கிண்ணியா நகர சபை முன்னாள் உறுப்பினர் எம். எம். மஹ்தி வான் எல் பொலிஸ் நிலையத்திற்கும், கிண்ணியா பிரதேச செயலாளருக்கும் அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கிண்ணியா பிரதேசத்தில் முஸ்லிம்கள் மாத்திரம் வாழ்ந்து வரும் பகுதியில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான இராணுவத்தினரால் கைவிடப்பட்ட இராணுவ முகாமுக்குள் குறித்த பௌத்த மதகுரு உட்பட குழுவினர் சென்று வருவதினால் ஏதும் பாதிப்புகள் ஏற்படலாம் எனவும் மக்கள் அச்சம் வெளியிட்டிருந்தனர்.

குறித்த கைவிடப்பட்ட இராணுவம் முகாமுக்குள் பௌத்த சிலைகளை வைப்பதற்கு முயற்சிக்கின்றார்களா அல்லது புதையல் தோண்டுவதற்கு ஏதாவது உட்படுகின்றார்களா எனவும் மக்கள் கேள்வி எழுப்பியுருந்தனர்.
இந்நிலையில், கிண்ணியா பிரதேச மக்கள் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் காலகட்டத்தில் இவர்களின் வருகை சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அப்பகுதியில் உள்ள மக்களும், நகர சபை உறுப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த காணி விவகாரம் தொடர்பாக ஆராய்வதற்கு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் அப் பிரதேசத்திற்கு நேற்று (06.10.2023) கள விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது அப்பிரதேச மக்களுடன் நீண்டநேரம் கலந்துரையாடியதுடன் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan