கிளிநொச்சியில் அதிகரிக்கும் சமூக சுகாதார குறைப்பாடுகள்
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்கொலை செய்துக்கொள்ளுதல் மற்றும் குறைந்த வயதில் கர்ப்பம் தரிப்பது அதிகரித்துள்ளதாக ஆய்வொன்றில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“இந்த நிலைமை மேலும் அதிகரிப்பதை தடுக்க சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகத்திற்கு மனநல மருத்துவ நிபுணர்களையும் மனநல ஆலோசகர்களையும் நியமிக்கும் விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறைந்த வயதில் கர்ப்பம்
குறிப்பாக பாடசாலை கல்வியை பூர்த்தி செய்யும் முன்னர் பெண் பிள்ளைகள் ஆண்களுடன் சேர்ந்து வாழ்வதை பெருமளவில் காணக்கூடியதாக உள்ளது. இதன் காரணமாக குறைந்த வயதில் கர்ப்பம் தரிப்பது கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்துள்ளது.
இப்படியான சமூக சுகாதார குறைப்பாடுகளை கண்டறிந்து விரைவான தீர்வுகளை வழங்குவதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் வடக்கு மாகாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.”என கூறியுள்ளார்.