கிளிநொச்சி மாவட்டத்திற்கு மேலும் 15 ஆயிரம் தடுப்பூசிகள் தேவை - அமைச்சர் டக்ளஸ் உறுதி
கிளிநொச்சி மாவட்டத்தில் வாழும் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்காக தேவையாக உள்ள எஞ்சிய 15 ஆயிரம் தடுப்பூசிகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைப்பாளர் தவநாதன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்படும் நிலையங்களின் கள நிலைமைகளை மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கனுடன் நேரில் சென்று கண்காணித்ததோடு நிலையங்களுக்குப் பொறுப்பாகவுள்ள சுகாதார அதிகாரிகளிடம் களநிலமைகளை கேட்டறிந்ததன் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
கிளிநொச்சி மாவட்டத்தில் கோவிட் -19 தடுப்பூசி வழங்கல் நடவடிக்கைகள் கடந்த 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. தெரிவுசெய்யப்பட்ட 9 நிலையங்களின் ஊடாக 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தொடர்ந்தும் 6 ஆவது நாளாக இன்றும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.
கரைச்சி பிரதேச செயலக பிரிவில் கிளிநொச்சி மத்திய கல்லூரி, அக்கராயன் மத்திய கல்லூரி, உருத்திரபுரம் இந்துக் கல்லூரி, வட்டக்கச்சி மத்திய கல்லூரி ஆகியவற்றிலும், கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் தர்மபுரம் தர்மபுரம் மத்திய கல்லூரியிலும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் பளை மத்திய கல்லூரியிலும், பூநகரி பிரதேச செயலக பிரிவில் பூநகரி வைத்தியசாலை, வேரவில் வைத்தியசாலை மற்றும் முழங்காவில் வைத்தியசாலை ஆகியவற்றிலும் கோவிட்-19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் மக்கள் குறித்த தொற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத் தடுப்பூசிகளை மிகுந்த ஆர்வத்துடன் நிலையங்களுக்கு வருகைதந்து பெற்றுச் செல்வதை அவதானிக்க முடிகின்றது.
அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் வாழும் 30 வயதுக்கு மேற்பட்ட மக்களின் தேவைக்கான மேலும் 15 ஆயிரம் தடுப்பூசிகள் தேவையாக உள்ளதாக சுகாதார தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில் அது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் குறித்த 15 ஆயிரம் தடுப்பூசிகளையும் விரைவில் பெற்றுத்தர நடவடிக்கை செய்வதாக அமைச்சர் உறுதியளித்துள்ளதாக தவநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.