கிளிநொச்சி மாவட்ட விவசாயக்குழு கூட்டம் முன்னெடுப்பு
கிளிநொச்சி மாவட்ட விவசாயக்குழு கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் நேற்றையதினம் நடைபெற்றுள்ளது.
கிளிநொச்சி மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்தமாவட்ட விவசாயக்குழு கூட்டத்தில் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற விவசாய நடவடிக்கைகளோடு எதிர்வரும் 2021ம் ஆண்டில் நடைமுறைப்படுத்தபடவுள்ள விடயங்கள் தொடர்பாகவும் இக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறிப்பாக விவசாயிகள் மற்றும் கால்நடைவளர்ப்போர் ஆகியோர்களிடையேயான பிரச்சனைகள் கால்நடைவளர்ப்போர் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகளின் தேவைப்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளன.
இதன் போது மாவட்ட அரசாங்க அதிபர் கருத்துத் தெரிவிக்கையில்,
மேய்ச்சல் தொடர்பிலான பிரச்சனைக்கான தற்காலிகமான தீர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் நிரந்தரமான தீர்வினை 2021 வருடத்திற்குள்ளாக பெற்றுக்கொடுப்பதற்கான வழிவகைகளையும் மேற்கொள்ள எண்ணியுள்ளோம்.
மேலும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள பெரும்போக நெல் அறுவடையின் பொழுது ஒரு ஹெக்ரெயருக்கு மேற்பட்ட பயிர்ச்செய்கையில் ஈடுபடுகின்ற விவசாயிகள் கட்டாயமாக 1000 கிலோ நெல்லினை நெற்ச்சந்தைப்படுத்தல் சபைக்கு விற்பனை செய்யவேண்டும் என்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு செய்யப்படாத சந்தர்ப்பத்தில் அவர்களுக்கான இலவச அல்லது மானிய அடிப்படையிலான உரம் வழங்குகின்ற செயற்பாடுகளை இடைநிறுத்த நேரிடும்.
ஒரு ஹெக்ரெயருக்கு மேற்பட்ட பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் கட்டாயம் 1000 கிலோ நெல்லினை நெற்ச்சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்குமாறும் கேட்டுக்கொடுள்ளார்.

