தனி வழி செல்லும் விமல், வாசு, கம்மன்பில?
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசாங்கத்தின் முக்கிய கூட்டணி கட்சிகளின் தலைவர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் தனி வழி செல்லும் தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளனர்.
அமைச்சரவையில் எடுக்கப்படும் தீர்மானங்கள் கூட்டுப் பொறுப்புடன் செயற்படும் மரபினை மீறி இந்த மூன்று அமைச்சர்களும் தனி வழியில் செல்லத் தீர்மானித்துள்ளனர்.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள யுகதனவ் மின் உற்பத்தி நிலைய பங்கு விற்பனை தொடர்பிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகள் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பை வெளியிட்டு உச்ச நீதிமன்றில் ஐந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் எதிர்வரும் 26ம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பொதுவாக அமைச்சரவையின் கூட்டுத் தீர்மானத்தினை நியாயப்படுத்தும் வகையில் சட்ட மா அதிபர் இந்த மனுக்களில் அமைச்சரவையின் சார்பில் முன்னிலையாக உள்ளார்.
இந்த மனுக்களின் பிரதிவாதிகளான அமைச்சரவை உறுப்பினர்கள் சார்பில் சட்ட மா அதிபர் முன்னிலையாகும் அதேவேளை, அமைச்சர்களான வாசுதேவ, உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் தங்களை பிரதிநிதித்துவம் செய்ய சட்டத்தரணிகளை தனியாக நியமித்துள்ளனர்.
தங்களது நிலைப்பாட்டை நீதிமன்றில் வெளிப்படுத்தும் நோக்கில் இவ்வாறு தனியாக சட்டத்தரணிகள் ஊடாக முன்னிலையாகின்றனர். ஆளும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கடந்த 17ம் திகதி உதய கம்மன்பிலவின் இல்லத்தில் சந்திப்பு ஒன்றை நடாத்தியிருந்தனர்.
இந்த ஒப்பந்தம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட விதம் சர்ச்சைக்குரியது என நீதிமன்றில் விளக்கமளிக்க இந்த கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆளும் கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் முக்கிய பங்காளிக் கட்சித் தலைவர்களது இந்த செயற்பாடு ஆளும் கட்சிக்குள் அதிர்வுகளை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.