கெசல்வத்த தினூஷ தப்பிச் செல்ல போலிக் கடவுச்சீட்டு : உதவிய சந்தேகநபருக்கு விளக்கமறியல்
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழு உறுப்பினர் ‘கெசல்வத்த தினூஷ’ வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வதற்காகப் போலி கடவுச்சீட்டைத் தயாரித்துக் கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை, எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் அசங்க எஸ்.போதரகம உத்தரவிட்டுள்ளார்.
குறித்த உத்தரவானது நேற்று(05.03.2026) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்
கொழும்பு - கெசல்பத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இஷார பஹல கலகே என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொலை, கப்பம் கோருதல், கொள்ளை மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 'கெசல்வத்த தினூஷ' என்றழைக்கப்படும் ஹேவாபேடிகே தினூஷ சதுரங்க, சுமார் மூன்று ஆண்டுகளாக டுபாயில் தலைமறைவாக இருந்த நிலையில், அண்மையில் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டார்.
'கெசல்வத்த தினூஷ' கைது செய்யப்பட்ட போது, அவரிடம் ‘இஷார பஹல கலகே’ என்ற பெயரிலான போலிக் கடவுச்சீட்டு இருந்தமை கண்டறியப்பட்டது.
அந்தக் கடவுச்சீட்டில் உள்ள தகவல்களின் அடிப்படையிலேயே தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.