கெஹலிய குடும்பத்தினர் மீண்டும் நீதிமன்றில்
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
புதிய திகதி
இந்த சம்பவம் தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், வழக்கை நீதவான் நீதிமன்றத்தில் தொடர வேண்டுமா என்பதை தெளிவுபடுத்துமாறு நீதிபதி, லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணையகத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்தநிலையில், நீதிமன்றத்தில் நேற்று முன்னிலையான லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள், தமது விசாரணை அதிகாரி இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என்று கூறி புதிய திகதியை கோரினர்.
இந்த சமர்ப்பிப்புகளை கருத்திற்கொண்ட தலைமை நீதிபதி அடுத்த விசாரணையை செப்டம்பர் 9 ஆம் திகதிக்கு நிர்ணயித்தார்.
2021 மற்றும் 2023இற்கு இடையில், கெஹலிய ரம்புக்வெல்ல ஊடகம், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த காலத்தில், தனது தனிப்பட்ட ஊழியர்களுக்கு பல நெருங்கிய கூட்டாளிகளை நியமித்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளுடன் இந்த வழக்கு தொடர்புடையதாகும்.
இந்த நபர்களுக்கு அமைச்சகத்தால் வழங்கப்பட்ட சம்பளம் மற்றும் கூடுதல் நேரக் கொடுப்பனவுகள், தனிப்பட்ட மற்றும் அரசியல் நடவடிக்கைகளுக்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்பட்டதாகவும், இதனால் அரசுக்கு 8 மில்லியன் ரூபாய்களுக்கு அதிகமான இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.



