ஜனநாயக நாடு ஒன்றில் தேர்தல்கள் முறையாக நடத்தப்பட வேண்டும் : கருணாகரன் எம்.பி தெரிவிப்பு
ஒரு ஜனநாயக நாட்டில் குறிப்பிட்ட காலத்திற்குப் பின்பு தேர்தல்களை நடத்தி மக்களின் ஆணையை பெற வேண்டும் அவ்வாறு நடைபெறாமல் விட்டால் அவர்கள் ஜனநாயக மக்கள் விரோதிகள் ஆவார் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (G. Karunakaran) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் (Batticaloa) அமைந்துள்ள அலுவலகத்தில் இன்று ((01.06.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் ஆணை
மேலும் தெரிவிக்கையில், “சிங்கள பௌத்த தலைவர்களுக்கும் தற்போதுள்ள ஜனாதிபதிக்கும் தேர்தல்களை ஒத்திப் போடுவது என்பது கைவந்த கலை.
2018ஆம் ஆண்டு தற்போது உள்ள ஜனாதிபதி அப்போதைய பிரதமராக இருந்த காலத்தில் எங்களது தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் ஆலோசனைக்கு அமைவாக நாடாளுமன்றத்தில் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு இன்று வரை மாகாண சபை தேர்தல் நடைபெறாமல் உள்ளது.
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைக்க முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும்.எனினும் நாடாளுமன்றம், நீதிமன்றம் ஊடாக அனுமதிகளை பெற்று மக்கள் ஆணையின் மூலம் தான் தேர்தல்களை பிற்போட முடியும்.
இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் மாறுபட்ட கருத்துக்களுக்கு ஜனாதிபதி உரிய பதில்களை வழங்காதுள்ளபோது தேர்தல்கள் எவ்வாறு நடக்கும் என பொதுமக்களும் குழம்பிப்போய் உள்ள நிலையில் உரிய காலத்திற்குப் பின்பு தேர்தல்களை நடத்தி மக்களின் ஆணையை பெற வேண்டும்.
இவ்வாறு நடைபெறாமல் விட்டால்
அவர்கள் ஜனநாயக மக்கள் விரோதிகள் ஆவார். எங்களது கட்சியின் நிலைப்பாடும் உரிய காலத்தில் தேர்தல்கள் நடைபெற வேண்டும்
என்பதுதான்” என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |