கார்த்திகை மாதமும் மாவீரர் நாளும்.....!
கார்த்திகை மாதத்தில் இலங்கையில் இரு மொழி பேசும் இனங்களும் தமது வீரர்களை நினைவு கூறுகின்றது. இரண்டும் வேறுபட்ட நிகழ்வு.
தமிழினம் தமது இனத்தின் விடுதலைக்காக போராடி வீரச்சாவு அடைந்த விடுதலை புலிகள் அமைப்பின் முதலாவது வீரனின் நாளை மாவீரர் நாள் என் பிரகடனப்படுத்தி ஆண்டுதோறும் நவம்பர் 27 நினைவு கூறுகின்றார்கள்.
இலங்கையை ஆட்சி செய்து வந்த அரசை கைப்பற்றுவதற்காக ஆயுதம் ஏந்தி போராடி வந்த ஜனதா விமுர்த்தி பெரமுன என்கின்ற ஜேவிபி தமது அமைப்பின் ஸ்தாபகரும் தலைவருமான ரோகண விஜயவீர என்ற தலைவர் சாவடைந்த நாளான கார்த்திகை 13 ஐ கார்த்திகை வீரர்கள் நாள் என அதை பிரகடனப்படுத்தி அவர்களும் அந்த நாளை நினைவு கூறுகின்றார்கள்.
புனிதமான மாதம்
இந்த இரு அமைப்பிலும் தமிழ், முஸ்லீம், சிங்கள வீர.வீராங்கனைகள் தங்கள் உயிர்களை தியாகம் செய்துள்ளார்கள் என்பது வரலாறு. நவம்பர் 2ம் திகதி தான் உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இறந்த ஆத்மாக்களின் நினைவு தினமாக உலகெங்கும் நினைவு கூறுகின்றார்கள்.
அதேபோன்று சைவ சமய மற்றும் இந்து சமய மக்களும் தமது இறந்தவர்களை நினைவில் வைத்து கார்த்திகை தீபம் ஏற்றி அவர்களுக்கு படையல் வைத்தும் நினைவு கூறுவார்கள். நாம் பொதுவாக பார்ப்போமானால் கார்த்திகை (நவம்பர்) மாதம் ஒரு புனிதமான மாதம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

தமிழ் தேசிய இன விடுதலைப் போராட்டமானது நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னர் ஒரு மேட்டுக்குடியினரின் கைளிலும், சுதந்திரத்திற்கு பின்னர் மேட்டுக்குடியினர் மற்றும் மத்திய தர வகுப்பினர்களின் கைகளிலும், 1970 களுக்கு பின்னர் மத்திய தர இளைஞர்களின் கைகளிலும் குடிகொண்டது.
முன்னையவர்கள் தங்களது கல்வி அறிவையும், செல்வத்தையும் கொண்டு பிரித்தானியரிடம் பேரம் பேசி தமது உரிமைகளை வென்றுவிடலாம் என்று நினைத்திருந்தனர். இருப்பினும், அவர்களது எண்ணங்கள் முழுவதும் காலனி ஆதிக்கத்தில் இருந்து இலங்கையை விடுவிப்பதிலையே குவிந்திருந்தது.
ஆறு கடக்கும் வரை அண்ணன், தம்பி. ஆறு கடந்த பின் நீயாரோ, நான்யாரோ என்னும் அனுபவ மொழிக்கு ஏற்ப சிங்கள தேசியம் தமிழ் தேசிய இனத்தை அடிமைப்படுத்த தொடங்கியது.
இந்த அடிமைத்தனத்தை தகர்த்தெறிந்து தமது இருப்பையும், அடையாளத்தையும், காத்துக் கொள்வதற்காக அடுத்த தலைமுறை மிதவாதத்தில் போராட்டத்தை முன்னெடுத்தது. அந்த மிதவாத தன்மை அரச பயங்கரவாதத்தினால் ஆயுத முனையில் அடக்கப்பட்டதைக் கண்டு தமது தலைவர்களுக்கு நேர்ந்த அவமதிப்பையும், இனத்திற்கு நேர்ந்த அவல நிலையையும் கண்டு இளம் தலைமுறையினர் ஆயுதமேந்தி போராடினர்.
தமிழீழ கோரிக்கை
மிதவாத தலைவர்களின் சகிப்புத் தன்மை எல்லை கடந்து சென்று இனி சிங்கள தேசியத்துடன் கைகோர்த்து பயணிக்க முடியாது என்ற நிலையை அடைந்த பின்னர் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மூலமாக மிதவாத தலைமையினால் இறைமையுள்ள தனியரசான தமிழீழ கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்தக் கோரிக்கையை அவர்களால் செயற்படுத்த முடியாமையின் காரணமாக இளைஞர்கள் தமது கைகளில் அந்தப் போராட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு முன்னோக்கி நகர்ந்தனர். இதன் விளைவாக தமிழ் தேசிய இனத்தின் மீதான அடக்கு முறையும் வன்முறையும் ஓரளவுக்கு கட்டுப்பட்டிருந்தது என்பதுடன் தமிழர் தாயகத்தில் வலிந்து மேற்கொள்ளப்பட்டிருந்த சிங்கள குடியேற்றமும், நிறுத்தப்பட்டிருந்தது.

இத்தகைய ஆயுதப் போராட்டமானது 2009 ஆம் ஆண்டு மௌனிக்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தமிழ் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தை தமது கைகளில் எடுத்துக் கொண்ட விடுதலைப் புலிகள் அந்த ஆண்டு கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மரணித்த சங்கரை நினைவு கூரும் வகையில் 1989 ஆம் ஆண்டு முதல் அதே கார்த்திகை 27 ஐ மாவீரர் தினமாக தமது இயக்கத்தில் இணைந்து செயற்பட்டு மரணித்தவர்களின் நினைவாக அனுஸ்டி வந்தனர்.
1989 முதல் 2008 வரை மிகவும் உணர்வு பூர்வமாகவும், தமிழ் தேசிய இனத்தின் அடிமைத்தனத்தை அகற்றிட வேண்டும் என்ற வேட்கையுடனும், அதற்கு திடசங்கற்பம் பூணும் தினமாகவும் அன்றைய நாள் அனுஸ்டிக்கப்பட்டு வந்தது.
இராணுவத்தினருடைய வெற்றி
உயிரிழந்தவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் சக போராளித் தோழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்திருந்த அந்த சூழல் ஒரு உணர்வு மிக்கதாகவும், தமது இனத்தின் விடுதலைக்காக தமது பிள்ளைகள் ஏதோ ஒரு விதத்தில் பங்காற்றியிருக்கிறார்கள் என்று அந்த பெற்றோர்களும், உறவினர்களும பெருமிதம் கொண்டிருந்தனர். தனித்தனிய அவர்கள் சோகத்தில் ஆழ்ந்திருந்தாலும் ஒரு கூட்டு நிகழ்வில் அவர்கள் அந்த துயரத்தை மறந்து பெருமிதம் கொண்டவர்களாகவே தெரிந்தனர்.
2009 மே மாதத்திற்கு பின்னர் பல்வேறு முகாம்களிலும், தடுப்பு காவல்களிலும் கூட அந்தப் போராளிகள் மாவீரர் தினத்தை அந்த சூழலுக்கு ஏற்ப சூட்சுமமான முறையில் அனுஸ்டித்துள்ளனர். இதனைப் போன்றே மக்களும் வீடுகளிலும், ஆலயங்களிலும், பிரத்தியேக இடங்களிலும் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தமது உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

வடக்கு, கிழக்கின் பல்கலைக்கழக சமூகம் அனைத்து அச்சுறுத்தல்களையும் கடந்து தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர். கடந்த ஆட்சிக்காலங்களில் இராணுவத்தினருடைய வெற்றியை கொண்டாடுவதற்கு அரசாங்கம் ஒவ்வொரு இடத்தை தேர்வு செய்திருந்தது.
ஒட்டுமொத்த தீவில் எண்ணிக்கையில் பெரும்பான்மையைக் கொண்டிருக்கின்ற சிங்கள, பௌத்த பேரினவாத ஆளும் வர்க்கம் தமிழ் தேசிய சிறுபான்மை இனத்தின் உரிமைகளை மறுத்து தனது காலடியின் கீழ் தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டும் என்ற சிந்தனைக்கு எதிராகவே தமிழ் தேசிய இனம் வீறு கொண்டு எழுந்திருந்தது. இவ்வாறு எழுந்து போராடிய இளைஞர்கள் போற்றப்பட வேண்டியவர்களாகவே அந்த சமூகம் கருதியது.
ஆனால் 2009 இற்கு பின்னர் அரசாங்கம் அவர்களை நினைவு கூருவது மீண்டும் புலிகளை மீள் உருவாக்குவதாக அமையும் என்று கூறி தனது முழுப்பலத்தையும் பயன்படுத்தி அந்த நினைவு கூரலை இருப்புக்கரம் கொண்டு அடக்கியது.
மரணித்துப் போன தமது உறவுகளை கூட்டாகவே, தனியாகவோ வீடுகளிலோ, பொது இடங்களிலிலோ, நினைவு கூருவதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது. அந்த உரிமையை மறுப்பது என்பது அடிப்படை மனிதவுரிமை மீறல் என்று சர்வதேச சமூகம் இடித்துரைத்ததன் விளைவாகவே கடந்த காலங்களில் சில சந்தர்ப்பங்களில் நினைவு கூருவதை அரசாங்கம், கண்டும் காணாமல் விட்டிருந்தது.
மாவீரர் நாள்
கடந்த வருடம் இந்த அனுஸ்டிப்பானது அரசியல்வாதிகளும் அவர்கள் பின்னால் மக்களும் சென்றிருந்தனர். இது ஒரு விதத்தில் மக்களுக்கு தைரியம் ஊட்டுவதாகவும் இருந்தது. இருப்பினும், அரசியல்வாதிகள் ஏதோ தம்மை தாமே விடுதலைப் புலிகளின் தலைவராக பாவித்துக கொண்ட சம்பவங்களும் உள்ளன.
இதன் காரணமாக மாவீரர் தினமானது மீண்டும் பழைய முறைக்கு திரும்பி உறவினர்களினதும், நண்பர்களினதும், சமூகத்தினதும் உணர்வு பூர்வ தினமாக அனுஸ்டிக்கப்பட வேண்டும்.

அரசியல் வாதிகளை நம்பிப் பயனில்லை என்று முடிவெடுத்து எப்படி மக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து தாமே போராடி வருகின்றார்களோ அதேபோல் இம்முறை மாவீரர் நாள் நிகழ்வினையும் தாமே ஒழுங்கமைத்து ஒரு சுயகட்டுப்பாட்டுடன் யார் முதன்மைச் சுடரை ஏற்றுவது என்பதில் கூட ஒரு தீர்க்கமான முடிவெடுத்து சுடரேற்றியவரின் குடும்பத்திற்கும், அவர்கள் மூலமாக ஒவ்வொரு போராளிக்கும் தமது உணர்வு பூர்வ அஞ்சலியை செலுத்த வேண்டும்.. மாவீரர் நாள் அரசியல் செய்வதற்கான நாள் அல்ல.
மாறாக அது மரணித்த உறவுகளின் ஆத்மாவிற்கான கூட்டு பிரார்த்தனையுடன் கூடிய நினைவு நாள். இந்த யாதார்த்த நிலையை புரிந்து கொண்டுள்ள அனுர அரசாங்கம் மாவீரர் நினைவு கூரலை வடக்கு கிழக்கில் செய்ய முடியும் எனவும் இராணுவம் வசமுள்ள துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. அரசாங்கம் சார்பாக இந்த அறிவித்தலை அமைச்சர் சந்திரசேகரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது ஜேவிபி ஆக ஒரு ஆயுதப் போராட்ட அமைப்பாக இருந்தமையால் நினைவு கூரல் தொடர்பில் அவர்களிடம் நல்லெண்ண விடயங்கள் உண்டு. தமது மறைந்த தலைவர் அவர்கள் நினைவு தினத்தை கார்த்திகை வீரர்கள் தினம் என கடந்த 13 ஆம் திகதி உணர்வெழுச்சியுடன் அனுஷ்டித்து இருந்தனர்.

அது போல் மாவீரர் தினத்திற்கான அனுமதியையும் வழங்கியுள்ளார்கள். இதனை சரியாக பயன்படுத்தி நினைவு கூரும் உரிமையை தொடர்ந்தும் பெற்றுக் கொள்ள வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழ் மக்களிடம் உள்ளது.
அரசாங்கம் அனுமதி தந்து விட்டது என்பதற்காக மாவீரர் நாளை அரசியல் ஆக்கவோ அல்லது தென்னிலங்கை மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தும் வகையிலோ செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் இந்த உணர்வு பூர்வமான நிகழ்வில் கலந்து கொண்டு தமது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தி ஓரளவு ஆறுதலை பாதிக்கப்பட்டவர்கள் பெறவேண்டும்.
அஞ்சலிக்கு அனுமதி வழங்கியது போன்று பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி, நியாயம் வழங்குவதற்கும் அரசாங்கம் முன்வர வேண்டும் என்பதே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினதும், காணி விடுவிப்புக்காக காத்திருப்போரினதும், நீதி விசாரணையின்றி அரசியல் காரணங்களுக்கதாக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அரசியல் கைதிகளினதும் அவர்களது உறவினர்களினதும் எதிர்பார்ப்பாகும்.
எதிர்காலத்தில் இதற்கான முன்னெடுப்புக்கள் நடைபெறுவது இந்த நாட்டை ஒற்றுமையாக கட்டி எழுப்ப உதவும்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Thileepan அவரால் எழுதப்பட்டு, 17 November, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.