இந்தியாவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 38 இலங்கை அகதிகள்! வெளியான புதிய தகவல்
இந்தியாவின் கர்நாடகாவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இலங்கை அகதிகள் 38 பேரும், உள்ளூர் அதிகாரிகள் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய தமது போராட்டத்தினை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளனர்.
கனடா செல்வதற்காக முகவர்களால் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களாலேயே காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விடுதலையாகியிருந்தனர்.
இருந்தபோதிலும் இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்து இலங்கை அகதிகள் 38 பேர் இன்று காலை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்கள் மூலமும் சமூகச் செயற்பாட்டாளர்களாலும் இலங்கைத் தூதரக அதிகாரிகள் மற்றும் கர்நாடகாவில் அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள பகுதிக்குப் பொறுப்பான அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை அகதிகளுடன் பேச்சுக்களில் ஈடுபட்டனர்.
இதன் போது எதிர்வரும் செவ்வாய்க்கிழமை, வெளிநாட்டு அகதிகள் விவகாரங்களைக் கையாளும் அதிகாரிகள் நேரில் வந்து கடவுச்சீட்டுக்களை வழங்குவதுடன் நாட்டிற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்வார்கள் என்றும் உண்ணாவிரத்தைக் கைவிடுமாறும் உள்ளூர் அதிகாரிகள் அகதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனை அடுத்து தமது போராட்டத்தினை தான் இடைநிறுத்திக்கொண்டதாகவும் வாக்குறுதி
நிறைவேறாத பட்சத்தில் தமது போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
கர்நாடகாவில் இலங்கை அகதிகள் 38 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கனடா செல்வதற்காக முகவர்களால் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களாலேயே காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாக கூறப்படும் இலங்கை அகதிகள் 38 பேர் இன்று தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடகாவின் மங்களுரில் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்களை விடுதலை செய்த நீதிமன்றம் அவர்களை நாட்டிற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது.
அகதிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டு
அதற்கான ஏற்பாட்டினைச் செய்வதற்காக 15 நாட்கள் அவகாசம் நீதிமன்றினால் வழங்கப்பட்ட போதிலும் தம்மை அனுப்பி வைப்பதற்கான ஏற்பாட்டினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்தே அகதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாரை தொடர்பு கொள்வது என்பது தெரியாமல் பரிதவிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு விடுதியில் தாம் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் உணவு, மருத்துவ வசதிகள் இல்லாம் இருப்பதாகவும் சிலர் கடும் நோய்த்தாக்கத்துக்கு உட்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்டவர்கள் தம்மை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காப்பாற்றுமாறு கண்ணீர் சிந்தும் கனடா செல்ல முற்பட்ட பல ஆண்கள்!(Video) |