கபிலவின் மர்ம மரணத்தின் பின்னணியில் மிரட்டல் வாக்குமூலமா..! மொட்டுக் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு
"ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மர்ம மரணம் என்பது தற்கொலை அல்ல; அது திட்டமிட்ட தற்கொலைக்கான தூண்டுதலாகும்" என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
பத்தரமுல்ல, நெலும் மாவத்தையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று(11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கபில சந்திரசேனவின் மரணம்
கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பாகப் பல்வேறு மர்மமான தகவல்கள் கிடைத்து வருகின்றன என்று தெரிவித்த அவர்,

குறிப்பாக அவருக்குப் பிணை வழங்கப்பட்ட விவகாரம் மற்றும் அதனை எதிர்த்த விடயங்கள் குறித்துத் தமது கட்சி தரப்பில் தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன என்றும், விரைவில் உண்மைகளை நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்தப் போவதாகவும் கூறினார்.
"மறைந்த கபில சந்திரசேனவிடம் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, பலவந்தமான முறையில் வாக்குமூலம் ஒன்று பெறப்பட்டுள்ளது.
அந்த வாக்குமூலத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் பெயர்களை வலுக்கட்டாயமாகச் சேர்க்குமாறு அவர் வற்புறுத்தப்பட்டார்.
மொட்டுக் கட்சி பரபரப்பு
இது குறித்து கபில சந்திரசேன உயிருடன் இருந்தபோதே நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருந்தார்" என்றும் சாகர காரியவசம் சுட்டிக்காட்டினார்.
நீதிக்குப் புறம்பாக, அச்சுறுத்திப் பெறப்பட்ட வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு தலைவர்களைச் சிக்க வைக்க அரசு முயலுமானால், அதற்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கிப் போராடுவார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நோக்கி விமர்சனங்களை முன்வைத்த அவர், ஜனாதிபதி அடக்குமுறையை ஏவி ஆட்சியை முன்னெடுக்க முற்பட்டால், அந்த அடக்குமுறைக்குத் தமது தரப்பு முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் காரசாரமாகத் தெரிவித்தார்.
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam