நாங்கள் நீதி கேட்டு நிற்பது சர்வதேசத்திடம் தான்! அருட்பணி கந்தையா ஜெகதாஸ்
இலங்கை அரசாங்கத்திடம் தமிழர்கள் எந்த நீதி நியாயத்தையும் எதிர்பார்க்க முடியாது, இது கடந்த 75 ஆண்டுகளாக நாம் கண்ட உண்மை என அருட்பணி கந்தையா ஜெகதாஸ் தெரிவித்துள்ளார்.
நாங்கள் நீதி கேட்டு நிற்பது சர்வதேசத்திடம் தான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொத்துவில்லில் இருந்து முள்ளிவாய்க்கால் வரையிலான பயணத்தின் மே 18 இன விடுதலை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம் நேற்று மாலை களுவாஞ்சிகுடியை வந்தடைந்தது.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் வைத்து அரசாங்கம் செய்த இனப்படுகொலைக்காக நாம் பொத்துவில் இருந்து முள்ளிவாய்க்கால் வரைக்கும் நீதி வேண்டி நடைபவனியாக செல்கின்றோம்.
நாங்கள் இனப்படுகொலைக்காக 13 வருடங்களாக நீதி கேட்டோம், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் எங்கே என்று நாம் நீதி கேட்டோம், கையளிக்கப்பட்டவர்கள் எங்கே என்று நீதி கேட்டோம், எதுவும் இதுவரையில் கிடைக்கவில்லை.
தொடர்ச்சியாக அரசாங்கம் 13 வருடகாலமாக கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை தமிழர் தாயகத்தில் நிறைவேற்றி வந்தது. எனவே வருகின்ற புதன்கிழமை (18) தமிழின அழிப்பு நாளாக இருக்கின்றது.
கடந்த 12ஆம் திகதி தமிழின அழிப்பு வாரம் ஆரம்பிக்கப்பட்டு அந்த வாரத்தின் 4வது நாளில் எமது பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசுதான் இனப்படுகொலையைச் செய்தது அந்த இனப்படுகொலையாளிகள் தான் தற்போதும் அரசாங்கமாக இருக்கின்றார்கள்.
ஆகவே இலங்கை அரசாங்கத்திடம் தமிழர்கள் எந்த நீதி நியாயத்தையும் எதிர்பார்க்க முடியாது. இது கடந்த 75 ஆண்டுகளாக நாம் கண்ட உண்மை. நாங்கள் நீதி கேட்டு நிற்பது சர்வதேசத்திடம் தான்.
இனப்படுகொலையாளிகளான மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகிய அந்தக் கம்பனி சர்வதேச நீதிமன்றில் நிறுத்தப்பட்டு இனப்படுகொலைக்கான நீதி வெளிப்படல் வேண்டும். அதுதான் எங்களது ஒரே கோரிக்கை என குறிப்பிட்டுள்ளார்.