மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்
பயணத்தடை அமுலில் உள்ளபோதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன.
பெரியகல்லாறு மூன்றாம் இரண்டாம் வட்டார பிரிவுகளின் பல பகுதிகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நேற்று முன்தினமும், நேற்றும் குறித்த பகுதியில் 43கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில், குறித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்போது கோவிட் தொற்று உறுதியானவர்களின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்பானவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கோவிட் தொற்று அதிகரித்துள்ள நிலையில் பயணத்தடையினை அரசாங்கம் அறிவித்துள்ளபோதிலும் அதனை மீறும் வகையில் மக்கள் செயற்படுவதன் காரணமாகத் தொற்று அதிகரித்துச்செல்லும் நிலையுருவாகியுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.


