கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரம்: சுகாதார அமைச்சருடன் தமிழ் எம்.பிக்கள் அவசர சந்திப்பு
சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவசர சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.
இந்த சந்திப்பானது நேற்றைய தினம்(19.08.2026) இடம்பெற்றுள்ளது.
சுகாதார அமைச்சருடனான சந்திப்பு
இந்த சந்திப்பின் போது வைத்தியசாலை தொடர்பாக சில விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அண்மையில் நடந்த சர்ச்சைக்குரிய சீருடை விவகாரத்தால் கல்முனை - வடக்கு வைத்தியசாலையில் இருந்து புதிதாக நியமனம் பெற்ற இஸ்லாமிய உதவியாளர்கள் கல்முனை அஷ்ரப் ஞாபகாரத்த வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் இடத்திற்கு பதிலாக கல்முனை - வடக்கு வைத்தியசாலைக்கு ஆளணி நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனை அமைச்சர் விரைவில் சீர் செய்வது தருவதாக உறுதியளித்துள்ளார். அடுத்ததாக புதிதாக நியமனம் பெற்ற தமிழ் வைத்தியசாலை உதவியாளர்கள் ஒரு குறுகிய ஆரம்ப பயிற்சிக்காக அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு சமூகமளிக்குமாறு கோரப்பட்டிருந்தனர்.
அஸ்ரப் வைத்தியசாலை ஒரு இஸ்லாமிய ஆதிக்கம் கொண்ட வைத்தியசாலை. இப்போது தமிழ் பிள்ளைகள் அங்கு பயிற்சிக்கு செல்ல பயப்படுகிறார்கள். ஆதலால் தமிழ் பிள்ளைகளுக்கு வேறொரு இடத்தை தெரிவு செய்யுமாறு ஒரு கருத்து அமைச்சரிடம் முன் வைக்கப்பட்டுள்ளது.
சீருடை பற்றிய சர்ச்சைகள்
இதனையடுத்து அமைச்சர் அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளார். அந்த இடத்தை தமிழ் பிள்ளைகளுக்கு மாற்றி தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சீருடை விடயம் மதச்சார்பற்றதாகவும் மொழி சார்பற்றதாகவும் இனச்சார்பற்றதாகவும் இருக்க வேண்டும்.
இலங்கையிலுள்ள அரச உத்தியோகஸ்தர்கள் மதத்துக்கேற்றவாறு மொழிக்கு ஏற்றவாறு இனத்துக்கேற்றவாறு சீருடை அணிவதில்லை. சீருடை ஆராய்வதற்கும் வடிவமைப்பதற்கும் ஒரு சிரேஷ்ட குழு அமைச்சு மட்டத்தில் இயங்கி வருகிறது.
சீருடை பற்றிய சர்ச்சைகள் எழும்பும் போது அதன் இறுதித் தீர்மானமே முற்றாகவும், முடிவானதுமாக இருக்கும். இந்த நாட்டு மக்கள் இலங்கையர்கள் இதை பிரித்து பார்க்க முடியாது. பிரித்துப் பார்க்கவும் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இ.சிறிநாத் மற்றும் ஞா.சிறிநேசன் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5