22ம் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 37 மனுக்கள் தாக்கல்!
உச்சநீதிமன்ற மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது உட்பட பல்வேறு சரத்துக்களை உள்ளடக்கிய 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உட்பட 37 தரப்பினரால் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இச்சட்டமூலமானது நீதிமன்றத்தின் சுதந்திரத்திற்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முன்மொழியப்பட்டுள்ள 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டுமாயின், அதனை சர்வஜன வாக்கெடுப்பிற்கு உட்படுத்துமாறு உத்தரவிடுமாறு மனுதாரர்கள் கோரியுள்ளனர்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் உதவிச் செயலாளர் லக்கித வாகிஸ்தஆரச்சி மற்றும் பொருளாளர் பசிந்து சில்வா, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சர்வஜன பலய கட்சிகள், முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசாரச் செயலாளர் துமிந்த நாகமுவ, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, சுயாதீன சட்டத்தரணிகள் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, சட்டத்தரணி அருண லக்ஸிறி, மிலிந்த ராஜபக்ஷ, கலாநிதி பாக்யசோதி சரவணமுத்து, மனித உரிமைகள் ஆணையாளர் அம்பிகா சத்குணநாதன், ஊடகவியலாளர் சுனில் ஜயசேகர ஆகியோர் சட்டமா அதிபரை பிரதிவாதியாகக் குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள இம்மனுக்களில் மனுதாரர்களாக இணைந்துள்ளனர்.

உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரின் ஓய்வுபெறும் வயதை 67 ஆக உயர்த்துவதற்கு இச்சட்டமூலத்தின் 2 ஆம் பந்தியில் முன்மொழியப்பட்டுள்ளது.
மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவரின் ஓய்வுபெறும் வயதை 65 ஆக உயர்த்தவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை 25 ஆக அதிகரிக்கவும் சட்டமூலத்தில் சரத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இச்சட்டமூலத்தின் பிரதான நோக்கம் முழு நீதிமன்ற அமைப்பின் கட்டமைப்பையும் மாற்றுவதாகும் என்றும், இது சர்வதேச சட்டங்கள், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை மற்றும் ஐநா சாசனத்தின் விதிகளை மீறுவதாகவும் மனுதாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
எனவே, அரசியலமைப்பிற்கு முரணான இச்சட்டமூலத்தை நிறைவேற்ற மக்களாணை அவசியம் என உத்தரவிடுமாறு கோரப்பட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 2 நாட்கள் முன்
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan