கல்கிசை நீதிமன்றத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம்: சந்தேகநபர்களின் மாதிரி வரைப்படங்கள் வெளியாகின
கொழும்பு - கல்கிசை நீதவான் நீதிமன்றத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு காரணமான சந்தேகநபர்களின் மாதிரி வரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
கல்கிசை நீதிமன்ற வளாகத்திற்குள் கடந்த ஆகஸ்ட் 4ஆம் திகதி வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடையவரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம்
40,000 ரூபா கடனட்டை மோசடி தொடர்பில் வௌ்ளவத்தை பொலிஸாரால் இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு தொடர்பில், வெலிகமையிலிருந்து வழக்கு விசாரணைக்கு சென்றிருந்த பிரதிவாதி, குற்றவாளிக்கூண்டில் ஏறிய போது சந்தேகநபரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த இரண்டு சந்தேக நபர்களின் மாதிரி வரைப்படங்களை பொலிஸார் இன்று வெளியிட்டுள்ளனர்.
பொலிஸார் வெளியிட்ட தகவல்
சிசிடிவி காட்சிகள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் துப்பாக்கிச் சூடு நடத்திய மற்றும் துப்பாக்கிச்சூட்டுக்கு உதவிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த மற்றொருவரின் மாதிரி படமும் வரையப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் சந்தேகநபர்கள் மகிழுந்தில் தப்பிச் சென்றுள்ளதாகவும், அதன் விபரங்களையும் பொலிஸார் தேடுவதாக ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சந்தேகநபர்கள் மற்றும் வாகனம் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் கல்கிசை குற்றத்தடுப்பு பிரிவுக்கு 011-271516 அல்லது கல்கிசை பொலிஸ் நிலையத்தின் 071-8591664 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.