இந்தியத் தூதரக அதிகாரிகளும் கச்சதீவு திருவிழாவில் பங்கேற்கக்கூடாது: விடுக்கப்பட்ட கோரிக்கை
தமிழக மக்களின் உணர்வுகளைப் புறந்தள்ளி இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் கச்சதீவு உற்சவத்தில் பங்கேற்கக்கூடாது என இராமேஸ்வரம் விசைப் படகுச் சங்கத் தலைவர் சேசுராயா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைதான கடற்றொழிலாளர்களுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு, அந்த கடற்றொழிலாளர்களின் குடும்ப வாழ்வாதாரம் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ள நிலையில் கச்சதீவு உற்சவத்தை புறக்கணித்து எமது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றோம்.
கச்சதீவு உற்சவம்
இந்தநிலையில் இலங்கை யாத்திரிகர்களின் பங்களிப்புடன் மட்டும் இடம்பெறும் கச்சதீவு உற்சவத்துக்கு இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் செல்லத் தயாராகி வருகின்றனர் என்று அறிந்து மன வேதனையடைகின்றோம்.
தமிழக கடற்றொழிலாளர்களின் மன உணர்வை மதித்து இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளும் மனிதாபிமான அடிப்படையில் இம்முறை திருவிழாவைப் புறக்கணிக்க வேண்டும். மாறாக திருவிழாவில் பங்குகொண்டால் அதற்கான விளைவை மத்திய அரசு எதிர்கொண்டே ஆக வேண்டும்.
இதேநேரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தியகடற்றொழிலாளர்களை விடுதலை செய்து மனிதாபிமானத்தைக் காண்பிக்க மறுக்கும் இலங்கை அரசுக்கு கச்சதீவு உற்சவத்துக்கான செலவுப் பணத்தை இந்திய மக்களின் வரிப் பணத்தில் இருந்து வழங்கக்கூடாது என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்கும் ஈரான்? பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள் News Lankasri
