அரசாங்கத்தின் வாகனம் இறக்குமதி செய்யும் நடவடிக்கையை கண்டித்துள்ள ஜேவிபி
இலங்கை இன்று இருக்கும் முக்கியமான கட்டத்தில் 227 பிராடோ வாகனங்களை 18 மில்லியன் அமெரிக்க டொலர் இறக்குமதி செய்ய அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை ஜேவிபி கண்டித்துள்ளதுடன் இந்த வாகன இறக்குமதியின் பின்னால் பாரிய மோசடி இருப்பதாக கூறியுள்ளது.
ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க விடுத்துள்ள சிறப்பு அறிக்கையில் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
2021 ஏப்ரல் 22 ஆம் திகதி வாகனக் இறக்குமதி செய்ய வங்கிக் கடன் கடிதம் (எல்.சி) திறக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 2021 மே 18 அன்று அமைச்சரவை ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அமைச்சரவை ஒப்புதல் இல்லாமல் கூட இந்த வங்கிக்கடன் கடிதம் திறக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் பின்னணியில் முழு செயற்முறையும் போர்ட் சிட்டி என்ற துறைமுக நகர யோசனைக்கு வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் செய்துக்கொள்ளப்பட்ட ஒரு உடன்படிக்கை என்று கூறியுள்ளார்.
வாகனங்களுக்கான வங்கிக்கடன் கடிதங்கள், 2021 ஏப்ரல் 22 அன்று திறக்கப்பட்டன. மே 18 அன்று அமைச்சரவை ஒப்புதல் கோரப்பட்டது. இருப்பினும், மே 24 அன்று நடந்த அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அமைச்சரவை யோசனை நிராகரிக்கப்பட்டது.
எனவே இந்த வங்கிக்கடன் கடிதங்கள், அமைச்சரவை ஒப்புதல் இல்லாமல் திறக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் வாகன இறக்குமதி தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கான மறைமுக ஒப்புதலுடன் அமைச்சரவை அறிக்கை ஒரு மாதத்திற்குப் பிறகு வழங்கப்பட்டது.
எனவே இந்த முழு செயல்முறையும் ஊழல் மிக்க செயற்பாடுகள் என்று அனுரகுமார குற்றம் சுமத்தியுள்ளார். இதேவேளை வங்கிக்கடன் கடிதங்களை திறப்பதற்கு முன்னர் உரிய கேள்விப்பத்திர நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளதா என்பதையும், போட்டி ஏலங்கள் கோரப்பட்டுள்ளதா என்பதையும் வெளியிடுமாறு அவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.