பிரதேச, சாதி அடிப்படையிலான இனவாத ஜே.வி.பி. இலங்கை அரசியலில் எழுச்சிபெற முடியுமா?
இலங்கை நாடாளுமன்றத்தில் தற்போது ஜே.வி.பி. மூன்று பிரதிநிதிகளை மட்டுமே கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த வாரம் ஜே.வி.பியினர் மாத்தறை மாவட்ட கூட்டுறவு சங்க தேர்தலில் 54 % வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளனர்.
இதனால் ஜே.வி.பி மீண்டும் எழுச்சி பெற்று வருவதாக பலரும் கூறத் தலைப்பிடுகின்றனர். இத்தோற்றப்பாடு நடைமுறையில் உண்மையானதா என்பதை பற்றி வரலாற்றுக் கண்ணோட்டத்தில் நோக்குவோம்.
ஆசியாவில் மாக்சிஸ இடதுசாரி இயக்கங்கள் சீனாவுக்கு அடுத்தபடியாக அதிகம் பலமாக வேரூன்றிய நாடுகளில் இலங்கை முக்கியமானது. இலங்கையில் 1920களின் பிற்பகுதியில் மார்க்ஸிய இயக்கங்கள் சூரியமல் இயக்கத்தின் ஆரம்பதோடு தான் வேர் விட ஆரம்பித்தன எனலாம். அதுவும் குறிப்பாக உலகிலேயே முதன் முதலில் ரோக்கிஸவாத இயக்கங்கள் தனித்துவமாக இலங்கையிலேயே தோற்றம் பெற்று வேரூன்றின.
இலங்கையில் மார்ஸித்தின் தந்தையென குறிப்பிடப்படும் பிலிப் குணவர்த்தன (Philip Gunawardena) ரோக்ஸிவாத மார்க்சியவாதி ஆவார். அவரின் பின்பு டாக்டர்கள் என்.எம்.பெரேரா (N.M.Perera), கொல்வின் ஆர் டி சில்வா (Colvin R.de Silva) மற்றும் பேனட் சோய்சா (Bernard Soysa) போன்ற முதுபெரும் தலைவர்கள் தோற்றம் பெற்றனர். இவர்களினாலேயே இலங்கையின் முதலாவது அரசியல் கட்சி தொடக்கி வைக்கப்பட்டது.
இலங்கையில் முதலாவதாக 1935 ஆம் ஆண்டு தோன்றிய கட்சி ரோக்ஸிவாத லங்கா சமசமாஜக் கட்சிதான். இரண்டாவது கட்சி 1943ல் தோன்றிய இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி. இது மொஸ்கோ சார்பு ஸ்டாலின் வாத கட்சியாகும்.
இதற்கு டாக்டர் எஸ்.ஏ.விக்ரமசிங்க (S.A.Wickramasinghe) தலைமை தாங்கினார். அந்த வகையில் இலங்கையில் முதலில் தோன்றிய இரண்டு கட்சிகளும் இடதுசாரி கட்சிகள் ஆகும்.
இவ்விரண்டு இடதுசாரிக் கட்சிகள் ஆரம்பிக்க்கப்பட்ட பின்னர்தான் இலங்கையில் மூன்றாவதாக 1944ஆம் ஆண்டு ஜி.ஜி.பொன்னம்பலம் (G.G.Ponnambalam) தலைமையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் எனப்படும் வலதுசாரிக் கட்சி தோற்றம் பெற்றது.
அதனைத் தொடர்ந்து 1946ஆம் ஆண்டு டி. எஸ். சேனநாயக்கா (D.S.Senanayake) தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி தோற்றம் பெற்றது. அதற்கடுத்ததாக 1949ல் எஸ்.கே.வி செல்வநாயகம் (S.K.V.Selvanayagam) தலைமையில் இலங்கை தமிழரசுக் கட்சி தோற்றம் பெற்றது. அதன் பின்பு 1951ஆம் ஆண்டு எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க (S. W. R. D. Bandaranaike) தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தோற்றம் பெற்றது.
மேற்படி இலங்கையில் தோன்றிய ஆறு கட்சிகளில் முதல் இரண்டும் சிங்கள இடதுசாரி கட்சிகளாகவும், அடுத்து இரண்டு தமிழ் வலதுசாரிக் கட்சிகளும், இரண்டு சிங்கள வலதுசாரி கட்சிகளும் தோற்றம் பெற்று இருப்பதை காணமுடிகிறது.
சுதந்திர இலங்கையில் வலதுசாரிக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த போதிலும் என். எம். பெரேரா (N.M.Perera) தலைமையிலான இடதுசாரிக் கட்சிகளே எதிர்க் கட்சியாக இருந்தன. இலங்கையின் பலமான தொழிற் சங்கங்கள் இடதுசாரிக் கட்சிகளின் பின்னணியைக் கொண்டதாகவே இருந்தன என்பது கவனிக்கத்தக்கது.
குறிப்பாக மலையக தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்கங்கள் இந்த இடதுசாரிக் கட்சிகளின் பின்புலத்தைக் கொண்டு பலம் பெற்று இருந்தன.
ஆனாலும் இடதுசாரிக் கட்சிகள் பெருமளவில் சாதி அடிப்படையிலான கட்சிகளாக இருந்தன. இலங்கையின் சனத்தொகையில் 20 சதவீதத்தை கொண்ட கரவ, துருவ, சலாகம சாதியை அடிப்படையாகக் கொண்டு இடது சாரிகள் இருந்தமையினால் இலங்கையின் தேர்தல் முறையில் ஜனநாயக முறைகளுக்கூடாக ஆட்சிக்கு வருவது சாத்தியமற்றுப் போயிற்று. இப்பின்னணியில் இடதுசாரிகள் படிப்படியாக நாடாளுமன்ற அரசியலில் தொடர்ந்து தோல்வியடைந்து சென்றனர்.
1943 ஆம் ஆண்டு உருவாகிய மொஸ்கோ சார்பு கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து 1961 ஆம் ஆண்டு என். சண்முகதாசன் (N.Shanmugadasan) தலைமையில் சீனச் சார்பு கம்யூனிஸ்ட் கட்சி தோற்றம் பெற்றது.
இந்த பீக்கிங் சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞரணித் தலைவராக இருந்த ரோகண விஜயவீர இவ்வாறு தொடர் தோல்வியடையும் இடதுசாரிக் கட்சியிலிருந்து பிரிந்து 1967ல் ஜே.வி.பி என்கின்ற ஆயுதம் தாங்கிய இடதுசாரி கட்சியை உருவாக்கினார்.
இவரின் ஆயுதம் தாங்கிய இடதுசாரி இயக்கம் கரவ, துருவ, சலம ஆகிய சாதியினரையும், தென்மாகாண பிரதேசத்தையும், குறிப்பாக காலி மாத்தறை அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டே தோற்றம் பெற்றது.
இப்பிரதேசத்தை தவிர ஆங்காங்கே வேறு பிரதேசங்களில் ஜே.வி.பி நிலைகொண்டிருந்தாலும் இந்த மூன்று மாவட்டங்களும்தான் அடிப்படையான தளமாக அமைந்திருந்தன. அத்தோடு இந்த மூன்று மாவட்டங்களிலும்தான் மேற்குறிப்பிட்ட சாதியினர் பெரும்பான்மையினராக உள்ளனர்.
இங்கிருந்துதான் 1971 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரோகன விஜேவீர (Rohana Wijeweera) தலைமையில் ஜே.வி.பியினர் தம்மால் ஜனநாயக வழியில் நாடாளுமன்ற முறைமைக்கு ஊடாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது என்ற நிலையில் ஆயுதப் புரட்சியின் மூலம் இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முனைந்தனர்.
சுதந்திர இலங்கையில் முதல்முறையாக 1971 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த முதலாவது ஆயுத கிளர்ச்சி சொற்ப காலத்துக்குள் இந்திய இராணுவ உதவியுடன் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா (Srimao Bandaranaike) அரசாங்கத்தினால் அடக்கி ஒடுக்கப்பட்டது.
ஆயுதக் கிளர்ச்சி நடந்த வேளை இலங்கை அரசு இந்தியாவிடமும், பாகிஸ்தானிடமும் இராணுவ உதவியை கோரியது. இலங்கைக்கு வந்திறங்கிய பாகிஸ்தானிய படையை இலங்கையில் செயற்படுவதற்கு இந்தியா அனுமதிக்க மறுத்துவிட்டது. அதன் அடிப்படையில் இலங்கை விமான நிலையத்தில் வந்திறங்கிய பாகிஸ்தானிய படை மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்பிச் செல்ல நேர்ந்தது என்பது இங்கே குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயம்.
ஜே.வி.பி கிளர்ச்சியில் ஈடுபடுவதற்கு முன்பாகவே ரோகன விஜேவீர (Rohana Wijeweera) கைதுசெய்யப்பட்டு யாழ்ப்பாணக் கோட்டையில் அடக்கப்பட்டு இருந்தமையினால், அந்தக் கட்சி ஒடுக்கப்படுகின்ற போது 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர், யுவதிகள் படுகொலை செய்யப்பட்ட போதும் ரோகண விஜயவீர கொல்லப்படாமல் தப்பிப் பிழைத்தார்.
அவ்வாறு கொல்லப்பட்டவர்கள் பெரும்பான்மையினர் தென் மாகாணத்தை சேர்ந்த கரவ, துரவ, சலாகம சமூகத்தைச் சார்ந்தவர்களே. ஜே.வி.பியின் பிரதான படைத்தலைவர்களான லொக்கு அதுல, பொடியதுல போன்றவர்களும் கரவ சமூகத்தினரே.
எனவே இந்த ஆயுதக் கிளர்ச்சியை சிங்கள கொய்காம உயர் சாதியினர் எதிர்த்த மையினால் இக்கிளர்ச்சியை இலகுவில் முறியடிக்கவும் முடிந்தது. இதன் பின்பு ஜே.வி.பியினர் இலகுவில் தலை எடுக்க முடியாத ஒரு நிலை காணப்பட்டது.
முதலாவது கிளர்ச்சியில் இரண்டு பிரதான காரணங்களினால் ஜே.வி.பி தோற்கடிக்கப்பட்டது. முதலாவது தென் மாகாண பிரதேசத்தையும் கரவ, துறவ, சலாகம சாதியினரையும் அடிப்படையாகக் கொண்ட சிங்கள உயர் குழாத்தை பெரிதும் இணைக்காமல் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இரண்டாவது மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள் வடக்கு - கிழக்கு தமிழர்கள் இந்தப் போராட்டத்தில் இனவாத அடிப்படையில் இணைக்கப்படாமல் தவிர்க்கப்பட்டமை அன்றைய காலத்தில் இலங்கையில் பல்கலைக்கழக மாணவர்கள் கம்யூனிஸ்டுகளாக இருந்தபோதிலும் கல்வி கற்கும் காலத்தில் இடதுசாரிகளாகவும், தொழில் வாய்ப்புக்கு செல்லுகின்ற போது வலதுசாரிகள் ஆகவும் மாறிவிடுகிறார்கள்.
அறிஞர் பெர்னாட்ஷா "இருபத்தி ஐந்து வயதுக்கு உட்பட்டவன் மாக்சிசம் பேசுவது நாகரிகம், 25 வயதிற்கு மேற்பட்டவன் மாக்சிசம் பேசினால் அவன் முட்டாள்"" என கூறியது இலங்கையின் இடதுசாரிகளுக்கும் பொருந்தும். ஜே.வி.பியின் கிளர்ச்சியில் ஏனைய சாதி, சமூகத்தினர் தீர்க்கமான பாத்திரம் வகிக்கவில்லை என்பதும் அவர்களுடைய தோல்விக்கு காரணம்.
ஆனால் 1987ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தமும் இந்தியப்படை இலங்கைக்கு வந்தமையும் ஜே.வி.பிக்கு புதிய ஊட்டத்தைக் கொடுத்தது எனலாம்.
இந்திய எதிர்ப்பு, தமிழின எதிர்ப்பு என்ற சிங்கள பௌத்த மேலாதிக்க மனநிலையை தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தியே ஜே.வி.பி சிங்கள மக்கள் மத்தியில் மீண்டும் எழுச்சி பெறத் தொடங்கி இவ் எழுச்சியின் போது சிங்கள உயர் சாதியினரும், ஜே.வி.பியினருடன் இணைந்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
இதன் விளைவாக 1988-1989களில் இலங்கையின் தென்பகுதியில் ஜே.வி.பியின் ஆயுதக் கிளர்ச்சி வீரியம் பெற்று வேகமாக வளர்ச்சி பெற்றது. இத்தகைய அதிவேக வளர்ச்சியை கண்டு ஜெயவர்த்தனா கதி கலங்கிப் போனார்.
இந்தச் சூழமைவில் நெருக்கடிகளுக்கு மத்தியில் 1989ஆம் ஆண்டு தேர்தலில் பிரேமதாசா சிங்களச் சமூகத்தில் நிலவிய பெரும் நெருப்பாற்றை கடந்து இலங்கையின் அதிபர் நாற்காலியில் அமர்ந்தார்.
இந்திய எதிர்ப்பு, தமிழின எதிர்ப்பு என்ற இனவாத ஆயுதத்தை கையில் எடுத்த ஜே.வி.பியை சிங்கள மக்கள் பெரும் தேசபக்தர்களாக மதிக்கும் நிலை உருவாகியிருந்தது. இந்த தருணத்தில் பிரேமதாசா இந்திய படையை வெளியேற்றும் பிரகடனத்தை வெளியிட்ட தோடு தமிழர் தரப்பில் புலிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஒரு நெருக்கடியை லாவகமாக சமாளித்தார்.
சம நேரத்தில் தனக்கு எதிரான இரண்டு எதிரிகளான இந்தியப்படை, மற்றும் புலிகளை நடுநிலைமைக்கு கொண்டுவந்ததோடு மூன்றாவது எதிரியாகிய ஜே.வி.பியை மிக மோசமாக வேட்டையாடி 1989 களின் இறுதியில் நவம்பர் மாதம் ரோகன விஜேவீர கொல்லப்பட்டதோடு 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் படுகொலையுடன் ஜே.வி.பி கிளர்ச்சி 1990ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் முறியடிக்கப்பட்டு முற்று முழுதாக அழிக்கப்பட்டுவிட்டது.
அதாவது இந்தியப் படை வெளியேறிய மறுநிமிடம் ஜே.வி.பி இலங்கையில் காணாமல் போய்விட்டது என்று கூறுவதே சாலப் பொருந்தும்.
இவ்வாறு ஒழிக்கப்பட்டு எஞ்சியவர்கள் பதுங்கி இருந்த வேளையில் 2000 ஆண்டிற்கு பின்னர் ராஜபக்சக்களின் தமிழின எதிர்ப்பு, புலிகளுக்கு எதிரான போர் என்ற போர்வையில் ஜே.வி.பியினர் ராஜபக்சக்களுடன் ஒட்டிக்கொண்டு மெல்ல மெல்ல வளரத் தொடங்கினர்.
இங்கே ஜே.வி.பியின் அனுசரணை ராஜபக்சக்கு தேவைப்பட்டது. ஏனெனில் புலிகளுடன் போராடுவதற்கு படை வீரர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. படைவீரர்களுக்கு ஆட்சேர்ப்பு விகிதமும் குறைந்து கொண்டே சென்றது.
இந்தப் பின்னணியில் ஜே.வி.பியினரை அணைத்து அவர்களுடைய ஆதரவில் தென்னிலங்கையில் கரவ, துரவ, சலாகம சாதியினரில் இருந்து இளைஞர்களை படைக்கு இணைப்பதற்கு வசதியும் ஏற்பட்டது.
இங்கே ராஜபக்சக்களுக்கு முன்னணியில் போரிடுவதற்கு ஆட்கள் தேவைபட்டது. அதே நேரத்தில் ஜே.வி.பியினர் இராணுவத்தில் தங்களுடைய ஆட்களை இணைப்பதன் மூலம் இலங்கை இராணுவத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடலாம் என கனவு கண்டனர்.
ஆனால் இதனை யூகித்துக் கொண்ட ராஜபக்சக்கள் இணைக்கப்பட்ட புதிய படை வீரர்களை புலிகளுக்கு எதிரான சண்டைகளின் முன்னரங்குகளுக்கு அனுப்பி அவர்களை பெருமளவில் பலியிட்டு யுத்தத்தை வெற்றியின் பக்கம் நகர்த்திச் சென்றனர்.
இந்த பின்னணியில்தான் 2004ஆம் ஆண்டு தேர்தலில் ஜே.வி.பியினர் 39 ஆசனங்களை பெற்று முன்னணிக்கு வந்தனர். அதே நேரத்தில் ஜே.வி.பியின் ஆதரவுடன் 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ச வெற்றி ஈட்டினார்.
2009ஆம் ஆண்டு யுத்தத்தில் வெற்றி பெற்றுவிட்டனர். இவ்வாறு யுத்தத்தில் வெற்றி பெற்ற பின்னர் ராஜபக்சக்களுக்கு ஜே.வி.பியினர் தேவைப்படவில்லை. அதே நேரத்தில் புலிகள் வீழ்த்தப்பட்ட பின்னர் சிங்கள தேசத்தில் புலி எதிர்ப்பு வாதம் என்ற பேச்சுக்கும் இடமற்றுப்போக ஜே.வி.பியினரை ராஜபக்சக்கள் அரசாங்கத்திலிருந்து நீக்கினர். இந்நிலையில் ஜே.வி.பியினர் படுதோல்வி அடைந்து இன்று மூன்று ஆசனங்களுடன் நிற்கின்றனர்.
இந்நிலையில் இந்த வாரம் மாத்தறை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் தேர்தலில் ஜே.வி.பியினர் 54 வீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளனர். இந்த வெற்றியைக் கண்டு ஜே.வி.பியினர் மீண்டும் எழுச்சி பெறுகிறார்கள் என பலர் தப்புக்கணக்கு போடுகிறார்கள்.
உண்மை அப்படியல்ல. மாத்தறை மாவட்டத்தில் பெரும்பான்மையினர் ஜே.வி.பியினரின் அனுதாபிகளான கரவ, துறவ, சலாகம சாதியினராவர். எனவே இங்கு பெற்ற வாக்குகளை வைத்துக் கொண்டு இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் பெறக்கூடிய வாக்குகளின் குறிகாட்டியாக இந்த வாக்குப்பதிவை எடுத்துக்கொள்ள முடியாது.
இக்குறிகாட்டி இன்று தென் மாகாணத்தில் மேலும் காலி, மாத்தறை ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு மட்டுமே பொருந்துமே தவிர ஏனைய பகுதிக்கு பொருந்தாது. ஜே.வி.பியினரை கண்டிச் சிங்கள உயர்சாதியினர் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
அத்தோடு இந்திய எதிர்ப்புவாதம், புலி எதிர்ப்புவாதம், தமிழின எதிர்ப்புவாதம் என்ற அவர்களுடைய கோசங்களுக்கு இன்று இடம் இல்லாது போய்விட்டது. இந்நிலையில் அவர்களுக்கான ஆதரவுத் தளம் ஒரு போதும் பெரிதாக விரிய வாய்ப்பில்லை .
இந்திய எதிர்ப்பு, இஸ்லாமிய எதிர்ப்பு, தமிழின எதிர்ப்பு என்பவற்றிற்கு வெற்றி வாதத்தின் உச்சியில் வீற்றிருக்கும் ராஜபக்சர்கள் போதுமானது என்ற அடிப்படையில் நின்றுதான் சிங்கள பௌத்த பேரினவாதிகள் சிந்திப்பார்கள். எப்படியிருந்தாலும் சிங்கள அரசியல் கலாச்சாரத்தின் படி ஜே.வி.பியின் வாக்கு வாங்கி ஆகக்கூடியது சாதி, பிரதேச அடிப்படையில் 20%ற்கு மேல் போகமுடியாது.