ஒருபோதும் நீதி மறுக்கப்படக்கூடாது: சபையில் சுமந்திரன் வலியுறுத்து
"அபாயகரமான போதைப்பொருள் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்காகப் பிணை விண்ணங்களை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஊடாக மாத்திரமே செய்வதாக இருக்கக் கூடாது. மாகாண மேல் நீதிமன்றத்தின் ஊடாகவும் அதற்கான வழிகள் இருக்க வேண்டும்" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(10.11.2022) நீதித்துறை தொடர்பான திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நீதி மறுக்கப்படக்கூடாது

அவர் மேலும் தெரிவிக்கையில், "அபாயகரமான போதைப்பொருள் பயன்பாடு தொடர்பில் பார்க்கும் போது, இவர்களுக்கு வழங்கப்படும் பிணை விண்ணப்பம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினாலேயே வழங்கப்படுகின்றது. நீதியை அணுகி அதனைப் பெற்றுக்கொள்வதற்கான முறையே இது.
மேன்முறையீட்டு நீதிமன்றங்கள் கொழும்பிலேயே உள்ளன. மேல்நீதிமன்றம் மாகாணங்களில் உள்ளன. ஆனால், இது முழு நாட்டிலும் மத்திய இடத்தில் செய்வதாக இருக்கக் கூடாது. இது நீதியை மறுப்பதாக அமையும். அதிகாரப் பரவலாக்கத்துக்கு எதிரானதாகவும் இருக்கும்.
கைதிகளுக்கு துன்பங்கள் இருக்க கூடாது

இதேவேளை, சிறைச்சாலைகளில் கைதிகளுக்குத் துன்பங்கள் இருக்கக் கூடாது. தண்டனை என்பது தீங்கானதாக இருந்தாலும் அதில் வகைப்பாடுகள் உள்ளன.
அரச தரப்பில் உள்ளவர்கள் சிறைச்சாலைகளில் ஆடம்பர சொகுசு மாடிகளை அமைக்க எதிர்பார்க்கின்றனர். அப்போதுதான் அவர்கள் அங்கு சென்றால் சொகுசாக இருக்கலாம் என்று நினைக்கின்றனர்.
ஆனால், சிறைச்சாலையில் அனைவரும் சமமாக இருக்க வேண்டும்.
சிறைக் கைதிகளுக்கிடையே வகுப்புவாதத்தை உருவாக்கிவிடக் கூடாது"என தெரிவித்துள்ளார்.
சொதப்பிய மெஸ்ஸி: கடைசி நிமிடங்களில் மேஜிக்.. சுவிஸை வீழ்த்தி அர்ஜென்டினா அரையிறுதிக்கு முன்னேற்றம் News Lankasri