இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மெய்பாதுகாவலரால் சுட்டு கொல்லப்பட்டவரின் தாயார் வெளியிட்ட அதிர்சித் தகவல்
கடந்த ஜீன் மாதம் 21 ம் திகதி இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் மெய்பாதுகாவர் ஒருவர், பொதுமகன் மீது துப்பாக்கி சூடு நடாத்தியதில் 34 வயதுடைய மகாலிங்கம் பாலசுந்தரம் கொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது தனது பிள்ளையை அடித்து கொலை செய்த பின்னர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து விட்டார்கள். இந்த கொடுமையைக் கேட்க ஆளில்லையா? எங்களுக்கு நீதி வேண்டும் என படுகொலை செய்யப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரத்தின் தாயார் அதிர்சித் தகவலை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் இவை தொடர்பில் தெரியவருவதாவது,
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்னால் அவரது மெய்பாதுகாவர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மெய்பாதுகாவலரின் வழக்கு விசாரணை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் வீ.தியாகேஸ்வரன் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை எடுக்கப்பட்ட போது, எதிர்வரும் 4ம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.
இந்த வழக்கு விசாரணைக்காக படுகொலை செய்யப்பட்டவரின் தந்தையான வேலுப்போடி மகாலிங்கம், தாயாரான மா. சின்னப்பிள்ளை நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தனர்.
ஒவ்வொரு வழக்கு விசாரணையின் போது மட்டக்களப்பு பொலிசார் மீது அதிருப்தி கொண்ட பாதிக்கப்பட்ட தரப்பு புலனாய்வுத்துறைக்கு இவ் வழக்கு மாற்றப்பட வேண்டும் என நீதவான் தெரிவிக்கின்றார், ஆனால் அதற்கு பொலிசார் எந்தவித பதிலும் இல்லை. இந்த ஆட்டோ சாரதி தான் எனது பிள்ளையை கொலைக்கு கொடுத்தவன் அவனுக்கு எல்லாம் தெரியும் அவனை பிடிக்கவேண்டும்.
எனது மகன் படுகொலை செய்யப்பட்டு இன்று 100 நாட்கள் கடந்துள்ளதாகவும் 8 ஆவது தடவையாக வழக்கு தவணை நடைபெறுகிறது. பொலிசார் ஒன்றும் தெரிவிக்கவில்லை.
எறாவூர் பொலிசார் தலைமையில் விசாரணை இடம்பெறுகின்றது. அவர்கள் பணக்கார அரசியல்வாதி, நாங்கள் ஏழைகள் என்பதால் எதுவும் நடக்கவில்லை. இந்த கொடுமையைக் கேட்க ஆளில்லையா எனது மகனின் படுகொலைக்கு நீதி வேண்டும் என படுகொலை செய்யப்பட்வரின் தாயாரான மகாலிங்கம் சின்னப்பிள்ளை கண்ணீர் மல்க தெரிவித்தார்.