திருகோணமலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 20ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு
திருகோணமலை ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சுகிர்தராஜனின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையில் ஈடுபடவுள்ளனர்.
திருகோணமலை துறைமுகத்தில் கடமையாற்றி வந்த சுகிர்தராஜன் தனது தொழில் நிமிர்த்தமாக திருமலையில் தங்கியிருந்ததோடு ஊடகவியலாளராகவும் பணியாற்றி வந்தார்.
வீரகேசரி பத்திரிகையில் எஸ்.எஸ்.ஆர், மனோ, ரஹ்மான் ஆகிய பெயர்களிலும் மெற்ரோ நியூஸ் பத்திரிகையில் ஈழவன் என்ற பெயரிலும் சுடர் ஒளி, உதயன் பத்திரிகைகளிலும் அரசியல் விடயங்களை எழுதி வந்தார்.
இந்நிலையில் 24.01.2006 அன்று காலையில் வேலைக்கு செல்வதற்கு பேரூந்துக்காக காத்திருக்கும் போது ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் உள்ள வீதியில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்.
2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி திருகோணமலை கடற்கரையில் வைத்து ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை உலகிற்கு வெளிச்சம்போட்டுக் காட்டியிருந்தார். இதன் காரணமாக அவர் குறிவைக்கப்பட்டிருந்தார்.
குறிப்பாக குறித்த ஐந்து மாணவர்களின் இறப்புக்கு கைக்குண்டு தாக்குதலே காரணம் எனக் கூறி விசாரணையை திசைதிருப்ப முயற்சி செய்த நேரத்தில் ஊடகவியலாளர் சுகிர்தராஜன் மிகவும் துணிச்சலுடன் செயற்பட்டு சுட்டுகொல்லப்பட்ட மாணவர்களின் சூட்டுக் காயங்களை நுட்பமாக படமெடுத்து குறித்த மாணவர்கள் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டே இறந்துள்ளனர்.
அவர்களின் தலையில் உள்ள காயங்கள் கைக்குண்டு தாக்குதலால் ஏற்பட்டவை அல்ல அது துப்பாக்கி குண்டுகளால் ஏற்படுத்தப்பட்டவை என்பதை உலகிற்கு வெளிக்காட்டியிருந்தார்.
மட்டக்களப்பு – குருமண்வெளியில் பிறந்த சுப்பிரமணியம் சுகிர்தராஜன் மிதுசா, சதுர்சன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.
தமிழ் சமூகத்தின் ஊடகப் போராளியாக செயற்பட்ட சுகிர்தராஜன் 36 வயதில் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இவரது இழப்பு தமிழ் ஊடக சமூகத்திற்கு மட்டுமல்ல அவரின் குடும்பத்திற்கும் பேரிழப்பாகும்.



