மன்னாரில் தொடரும் நகை அபகரிப்பு: பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி கவனயீர்ப்பு போராட்டம்
மன்னார் மாவட்ட குடும்ப நல உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து முன் கையில் கருப்பு பட்டி அணிந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த போராட்டம் இன்று(21.02.2026) மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்னர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, மன்னார் மாவட்ட குடும்ப நல உத்தியோகத்தர்கள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்று மது ஒன்றையும் கையளித்துள்ளனர்.
மனு கையளிப்பு
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மன்னாரில் கடமையாற்றும் குடும்பநல உத்தியோகத்தர் ஒருவர் கடந்த 14ஆம் திகதி கடமைக்கு சென்ற நேரத்தில், அவர் இடை மறிக்கப்பட்டு அவரிடம் இருந்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலி அபகரிக்கப்பட்டதோடு, அவருக்கு அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டது.

கடமை நேரத்தில் குறித்த குடும்ப நல உத்தியோகத்தர் வழிமறிக்கப்பட்டு, உடமைகள் அபகரிக்கப்பட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தும் கையில் கருப்பு பட்டி அணிந்து குறித்த போராட்டத்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்
இந்நிலையில், இன்று(21) காலை 9.30 மணி அளவில் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இருந்து மன்னார் பஜார் பகுதி வரை குடும்ப நல உத்தியோகத்தர்கள் பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றுள்ளனர்.

அதன் பின்னர் மாவட்டச் செயலகத்திற்கு முன் அமைதியான முறையில் கண்டன போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் வரை பேரணியாக சென்ற குடும்ப நல உத்தியோகத்தர்களால் உயர் அதிகாரியிடம் தமது கோரிக்கைகளை முன் வைத்து மனு ஒன்றும் கையளிப்பட்டுள்ளது.
தங்க நகைப் பறிக்கும் கும்பல்
இதன்போது, தொடர்ச்சியாக நகைப் பறிப்பில் ஈடுபடும் கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும், பெண்கள் தனியாகச் செல்லும் பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும், மன்னார் நகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி மக்கள் அச்சமின்றி வாழ வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மன்னார் நகரின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் தனியாக நடமாடும் இடங்களை கண்காணித்து மோட்டார் சைக்கிளில் வரும் மர்ம நபர்களால் நகைகள் பறிக்கப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதுவரை இவ்வாறான 4 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் பெண்கள் வீதிக்கு இறங்கி நடமாடுவதற்கு அச்சமடைந்துள்ள தோடு, தமக்கான பாதுகாப்பு இல்லை என்றும் கவலை வெளியிட்டுள்ளனர்.


