கொழும்பில் இருந்து கொண்டு கேள்வி எழுப்புபவர்களுக்கு பதிலளிக்க வேண்டிய தேவை எனக்கில்லை! - ஜீவன் தொண்டமான்
பலர் கொழும்பில் இருந்து கொண்டு கேள்விகளை எழுப்பலாம், அவர்களுக்கு பதிலளிக்க வேண்டிய தேவை தனக்கு இல்லை என தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கொட்டகலை கிறிஸ்லஸ்பாம் தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 12 தனி வீடுகளை கட்டி அமைக்க நேற்றைய தினம் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் வீடமைப்பு திட்டத்தின் கீழ் இந்த அடிக்கல் நாட்டும் வைபவம் நடத்தப்பட்டுள்ளது.
இதில் இராஜாங்க அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் தலைமை தாங்கி அடிக் கல்லை நாட்டி வைத்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
பல்கலைக்கழகத்திற்கான அடிப்படை வேலைகள் நடந்து முடிந்துள்ளன. இன்று தேசிய கட்டட ஆராய்ச்சி மையத்தின் அறிக்கையையும் பெற்றுக் கொண்டுள்ளோம். 16 தேசிய பாடசாலைகளையும் உருவாக்கியுள்ளோம்.
3 வருடங்களாக இழுபறி நிலையில் இருந்த உதவி ஆசிரியர் நியமனத்தினையும் முடித்து கொடுத்துள்ளேன். இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை பெற்றுத் தருவதாக தெரிவித்திருந்தேன். இன்று குறித்த வேலை வாய்ப்பினை பெற்றுக்கொடுத்துள்ளேன்.
அதனையும் ஒரு சிலர் குற்றம் கூறினார்கள் புட்சிட்டியில் வேலை வாய்ப்பு என்று. இன்று பல நூறு பேருக்கு சுய தொழில் செய்வதற்கான வசதிகளை செய்து கொடுத்துள்ளோம். பலர் கொழும்பில் இருந்து கொண்டு கேள்விகளை எழுப்பலாம்.
அவர்களுக்கு பதிலளிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை. நான் பதிலளிக்க வேண்டியது உங்களுக்கு மாத்திரம் தான். கடந்த நல்லாட்சியில் போது இந்திய அரசாங்கம் பெற்றுக் கொடுத்த 4000 வீடுகளில் 699 வீடுகள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
மீதி வீடுகள் கட்டப்பட்டு இருந்தாலும் அவற்றிக்கு நீர் மின்சாரம், வீதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததன் காரணமாக இன்று கையளிக்காமல் அப்படியே உள்ளன. இதனை யார் செய்ய வேண்டும்.
நான்கு வருடங்கள் அமைச்சராக இருந்த போது கட்டிய வீடுகள் என்றால் அதனை அவர் தானே முடித்திருக்க வேண்டும். இப்போது சொல்கிறார்கள் அது அரசியல் பழிவாங்கல் என்று.
நான் இந்த அமைச்சினை பொறுப்பேற்ற பின் அந்த வீடுகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன். செப்டெம்பர் மாத இறுதிக்குள் அதனை நிறைவு செய்து விட்டு இந்திய அரசாங்கத்தினால் பெற்றுக் கொடுத்த 10000 வீடுகளையும் அடுத்த மாதம் அளவில் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இன்று சிலர் நான் ஒரு செங்கல் கூட வைக்கவில்லை என்று சொல்கிறார்கள்.
பல ஆண்டு காலமாக தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பலர் இன்னும் தற்காலிக குடியிருப்புக்களில் வாழ்ந்து வருகிறார்கள். தற்போது அவர்களுக்காக 300ற்கு மேற்பட்ட வீடுகள் கட்ட ஆரம்பித்துள்ளோம்.
ஆகவே எதிர்காலத்தில் எமது மக்களுக்கு என்னென்ன தேவையிருக்கிறதோ அவை அனைத்தையும் எதிர்வரும் காலங்களில் செய்து முடிப்பேன் அனைவரும் ஒற்றுமையாக இருங்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





