இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர்
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த கலந்துரையாடலானது இன்று (23.12.2025) கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பேரிடர் நிவாரணம், வெளிப்படைத்தன்மை மற்றும் நீண்டகால பேரிடர் மேலாண்மை ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
பேரிடர் தயார்நிலை மாதிரி
அத்தோடு, டித்வா புயலைத் தொடர்ந்து இந்திய அரசாங்கம் அளித்த உதவிக்கு, குறிப்பாக ஆபரேஷன் சாகர் பந்துவின் கீழ் வழங்கப்பட்ட நிவாரணத்திற்கு பிரேமதாச நன்றி தெரிவித்தார்.

2004 ஆம் ஆண்டு சுனாமியின் போது இலங்கையின் அனுபவத்தைக் குறிப்பிட்ட எதிர்க்கட்சித்தலைவர், நாடு ஒரு வலுவான பேரிடர் மேலாண்மை கட்டமைப்பை நிறுவுவதற்கு போதுமான பாடங்களை கற்றுக்கொள்ளத்தவறிவிட்டது என்றும், இது டித்வா சூறாவளியால் ஏற்பட்ட இழப்புகளின் அளவிற்கு பங்களித்தது என்றும் கூறினார்.
எதிர்கால அபாயங்களை குறைப்பதற்கு அர்ப்பணிப்புள்ள பேரிடர் மேலாண்மை அமைச்சகம் மற்றும் விரிவான தேசிய உத்தியின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
மேலும், எதிர்கால அவசர நிலைகளில் உயிர் இழப்பை குறைக்க இதேபோன்ற பேரிடர் தயார்நிலை மாதிரிகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் இலங்கை பயனடையக்கூடும் என்று ஜெய்சங்கர் கூறினார்.