யாழில் நடனமாடிய இளைஞனுக்கு நேர்ந்த கதி
யாழில் பூப்புனித நீராட்டுவிழாவில் நடனம் ஆடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் (27) இடம்பெற்றுள்ளது.
பண்டத்தரிப்பு - பல்லசுட்டி பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய அன்னராசா அலெக்ஸன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
திடீர் மரணம்
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
மல்லாகம் - பயிரிட்டால் பகுதியில் பூப்புனித நீராட்டுவிழா கொண்டாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வுக்கு சென்று அங்கு உணவு அருந்திக்கொண்டிருந்த உயிரிழந்த நபர் ஒலிபெருக்கியில் பாடல் ஒலிக்கும்போது எழுந்து சென்று அந்த பாடலுக்கு இளைஞர்களுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார். இதன்போது திடீரென கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார்.
இந்நிலையில் அவரை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மரணத்திற்கான காரணம்
சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனைகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டன.
மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
சாட்சிகளை தெல்லிப்பழை பொலிஸார் நெறிப்படுத்தினர்.
மரணத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



