யாழில் ஆயுத படையினரின் வன்முறை தாக்குதலுக்கு வன்மையான கண்டனம்: சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்
யாழ்ப்பண பல்கலைகழக மாணவர்களால் யாழில் ஒழுங்கு செய்யப்பட்ட அமைதிவழி பேரணியில் இடம்பெற்ற வன்முறைத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தெரடர்பில் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை வருமாறு,
தமிழர் தாயகப் பகுதியான யாழில் தேசிய பொங்கல் எனும் பெயரில் இலங்கை ஜனாதிபதி ரணில் தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தில் (15.01.2023) சர்வதேசத்திற்கும் சிங்கள மக்களுக்கும் அரங்கேற்றப்பட்ட நாடகத்தை தோலுரித்துக் காட்டும்
விதமாக யாழ் பல்கலைகழக மாணவர்களால் ஒழுங்கு
செய்யப்பட்ட அமைதிவழி பேரணியில் இடம்பெற்ற தாக்குதலை கண்டிக்கின்றோம்.
இவ் அமைதிவழி பேரணியில் கலந்து கொண்ட வயோதிபத்தாய்மார்கள், சிறுவர்கள், பெண்கள், மதத்தலைவர்கள் மற்றும் மாணவர்கள் மீது இலங்கை பொலிஸாரினாலும், விசேட அதிரடி படையினராலும், இராணுவத்தினராலும் மேற்கொள்ளப்பட்ட வன்முறை பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப்பிரயோகத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
தமிழர் தாயகப் பகுதியில் அடக்குமுறை
தமிழர் தாயகப் பகுதியில் தமிழ் மக்கள் ஆகிய நாம் சுதந்திரமாக நடமாட முடியாமலும், எமது அரசியல் நிலைப்பாட்டினை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியாமலும் தொடர்ச்சியான அடக்குமுறைக்குள்ளேயே கடந்த பதின்மூன்று வருடங்களாக வாழ்ந்து வருகின்றோம்.
எமது உறவுகளைக் கொன்று குவித்த, காணாமல் ஆக்கிய, எமது நிலங்களை ஆக்கிரமித்து நிற்கும் இலங்கை ஆயுத படையினரும், புலனாய்வாளர்களும் தொடர்ச்சியாக எமது மக்களை அச்சுறுத்தியும், அவர்களின் ஜனநாயக உரிமைகளை மறுதலித்தும் ஒடுக்கு முறைகளை பிரயோகித்தே வருகின்றனர்.
நீண்டகால கோரிக்கை
ஆனால் தைப்பொங்கல் தினத்தன்று பொதுமக்கள் மீது நேரடியாகவே தாக்குதலினை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவமானது எமது நீண்டகால கோரிக்கைகளான,
1. இலங்கை ஆயுத படையினரை தமிழர் தாயகத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும்.
2. தமிழ்த் தேசிய இனப்பிரச்சனைக்கான எந்தவொரு நிரந்தர அரசியல் தீர்வுக்கும், சர்வதேசத்தினால் நடாத்தப்பட்டு கண்காணிக்கப்படும் பொதுவாக்கெடுப்பின் மூலம் தமிழ் மக்களின் ஆணையைப் பெற வேண்டும்.
இதில் சர்வதேசத்தினால் அங்கீகரிக்கப்பட்ட இனப்பிரச்சனைக்கான தீர்வுகள் தெரிவுகளாக உள்ளடக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கைகளினை மீண்டும் வலுப்படுத்தியுள்ளது.
ரணில் எனும் சிங்கள பேரினவாதி
சிங்கள பேரினவாதம் தொடர்ச்சியாகவே வெளிப்படுத்தும் அதன் கோர முகத்தினையும், குறிப்பாக ரணில் எனும் சிங்கள பேரினவாதியின் உண்மை முகத்தினை சர்வதேசம் புரிந்து கொள்வதுடன், இவ்வடக்குமுறையினை வன்மையாகக் கண்டிப்பதுடன் மீள நிகழாமையை உறுதி செய்ய வேண்டும்.
தொடர்ச்சியாகவே கிழக்கைப் புறந்தள்ளி வடக்கில் மட்டுமே தமிழ் மக்களுக்கு பிரச்சனைகள் உள்ளன என எமது பாரம்பரிய தாயகமான வடகிழக்கைத் துண்டாடுவதிலும், தமிழ் தேசியத்தைச் சிதைப்பதிலும் மும்முரமாகச் செயற்படும் இலங்கை ஜனாதிபதி ரணிலின் ராஜதந்திரத்தினை முறியடித்து, எமது தாயக நிலத்தைப் பாதுகாக்க தமிழ்த்தேசியத்தின் பால் பயணிக்கும் அனைவரும் ஓரணியில் அணிதிரளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனத் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்


