வடக்கில் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள்: கண்டனம் வெளியிட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
ஜனாதிபதியின் வடக்கு விஜயத்தின் போது, அதற்கு எதிராக போராடியவர்கள் கைது செய்யப்பட்டமை அப்பட்டமான ஜனநாயக உரிமை மீறல் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
பொலிஸாரின் இந்த செயற்பாட்டை கண்டித்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்றையதினம் (11.01.2024) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வடக்கிற்கான பயணத்தின் போது, அறவழியில் போராடிய வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி ஜெனிற்றா கைது செய்யப்பட்டுள்ளார்.
உரிமைகளை அடக்கும் செயற்பாடுகள்
அனைத்துலகச் சமூகத்தின் முன்னால் சனநாயக உரிமைகள் வழங்கப்படுவதாக ஒரு போர்வையைப் போர்த்திக் கொண்டு, அறவழியில் போராடிய மக்களின் உரிமையினை பொருட்படுத்தாது, அவர்களை அடக்கியொடுக்குவதற்கு முயலும் இந்த இலங்கை அரசின் போக்குகள் உலக அரங்கின் முன்னால் வெட்ட வெளிச்சமாக்கப்பட வேண்டியவையாகும்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நியாயமானதும் நீதியானதுமான பதிலொன்றைக் கூறுவதற்கு இயலாத அரசு, அவற்றுக்காக போராடும் உறவுகளை இன்று வரையில் வீதியில் விட்டுள்ளதோடு, அவர்களுக்கான நீதியையும் மறுத்து வருகின்றது.
இந்நிலையில், தங்கள் உறவுகளுக்கு நேர்ந்த கதிக்கு பதில் கோரி அற வழியில் போராடும் உறவுகளின் உரிமையினையும் கருத்துரிமையினையும் அடக்கியொடுக்கும் செயற்பாடாகவே ஜெனிற்றாவின் கைது நோக்கப்பட வேண்டியுள்ளது.
நவீன அடிமைத்தன்மை
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக குரல் கொடுத்துவரும் இன்னபிற செயற்பாட்டாளர்கள் மற்றும் உறவினர்களை புலனாய்வுப்பிரிவினர் உள்ளிட்ட அரச படைகள் அச்சறுத்தும் போக்கும் ஆங்காங்கே இடம்பெற்று வருகின்றது என்பது யாவரும் அறிந்ததே!
இதுபோன்ற அப்பட்டமான சனநாயக மீறல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் இலங்கை அரசு, உதட்டளவில் நல்லிணக்கம் பேசும் செயல்களில் ஈடுபடாமல், உளச்சுத்தியுடன் நிலையான நல்லிணக்கத்தினை எட்டுவதற்கு முயல வேண்டும்.
தமிழ் மக்களை ஓரவஞ்சனையுடன் வஞ்சித்து விட்டு நல்லிணக்கம் பற்றிய உரையாடல்களை மேற்கொள்வதென்பது 21ஆம் நூற்றாண்டில் நவீன வடிவில் அடிமைத்தனத்தை தமிழ் மக்கள் மீது திணிக்க முயல்வதாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
