உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள தனியார் காணிகள்.. முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள தனியார் காணிகளை விடுவிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் மூன்றாவது வாரமாகவும் இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பலாலி சந்தியில் காலை 8.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் நிலங்களை மீள வழங்குமாறு வலியுறுத்தினர்.
காணி விடுவிப்பு
இப்போராட்டத்தில் மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையத்தின் அமைப்பாளர் சட்டத்தரணி பவானி பொன்சேகா, இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான M.A. சுமந்திரன், வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் சுகிர்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

இங்கு வருகை தந்த பவானி பொன்சேகா மக்கள் பிரதிநிதிகளுடன் நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
அதேவேளை, ஜனாதிபதி சட்டத்தரணி M. A. சுமந்திரன் நீதிமன்ற வழக்குகள் மற்றும் காணி விடுவிப்பு தொடர்பான நிலைமைகள் குறித்து மக்களுடன் கலந்துரையாடி, இதுவரை ஏற்பட்ட முன்னேற்றங்களை விளக்கினார்.
மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ள காணி விடுவிப்பு விவகாரம் மீண்டும் தீவிர கவனத்தை ஈர்த்துள்ளது.
அதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வெய்யிலில் இருந்து தம்மை பாதுகாக்க அப்பகுதியில் தற்காலிக கொட்டகை அமைக்க முற்பட்ட போது பலாலி பொலிஸார் அதற்கு தடைவிதித்ததுடன், வடக்கில் கொட்டகை அமைத்து போராடினால் தெற்கிலும் கொட்டகை அமைத்து போராடுவார்கள் என்பதால் கொட்டகை அமைக்க அனுமதிக்க முடியாது என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.





