யாழில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கும் சாத்தியம்: வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர்
வட மாகாணத்தை பொருத்தவரை கடந்த இரண்டு வருடங்கள் டெங்கு நோயின் தாக்கம் மிகக் குறைவாக காணப்பட்டதாக வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து தற்போது அதிகரித்துவரும்
நோய்த் தாக்கங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது இந்த வருடத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து உள்ளதை நாம் காணக்கூடியதாக உள்ளது.
வடமாகாணத்தில் இந்த வருடத்தில் இன்று வரையான காலப்பகுதியில் 1785 நோயாளர்கள் டெங்கு நோயுடன் இனங்காணப்பட்டு இருக்கின்றனர்.
இவர்களில் யாழ். மாவட்டத்தில் இருந்து 1506 பேரும், மன்னார் மாவட்டத்தில் இருந்து 147 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 61 பேரும், வவுனியா மாவட்டத்தில் இருந்து 44 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து 27 பேருமாக நாட்டில் இனங்காணப்பட்டுள்ளார்கள்.
யாழ்ப்பாண மாவட்டத்தை பொருத்தவரை யாழ். மாநகரசபை கரவட்டி, பருத்திதுறை, கோப்பாய், நல்லூர் போன்ற பிரதேச செயலக பிரிவுகளிலே அதிகளவான நோயாளர்கள் இந்த வருடத்தில் இனங்காணப்பட்டுள்ளார்கள்.
இந்த வருடத்திலேயே இன்று வரையான காலப்பகுதியிலே டெங்கு நோயினால் 05 உயிரிழப்புகள் வடமாகாணத்தில் இடம்பெற்று இருக்கின்றன. இந்த 05 உயிரிழப்புகளும் யாழ். மாவட்டத்திலேயே ஏற்பட்டு இருக்கின்றன.
தற்போது, தென் மேற்கு பருவமழை ஆரம்பிப்பதனால் டெங்கு நோயின் தாக்கம் மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மத்திய சுகாதார அமைச்சு ஒரு விஷேட நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் நமது நாட்டில் இருக்கக்கூடிய இருபது மாவட்டங்களிலே அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த மே மாதம் 18ம் திகதி முதல் 24ம் திகதி வரை இந்த விஷேட நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்தக்காலப்பகுதியிலே எமது நாட்டில் அதிகூடிய நோயாளர்கள் இனங்காணப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலே இந்த செயற்திட்டம் நடைமுறைப்படுத்தபடுகிறது.
இதற்கு ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் அதிக நோயாளர்கள் இனங்காணப்பட்ட கிராம உத்தியோக பிரிவுகள் இனங்காணப்பட்டு அந்த பிரிவுகளில் விஷேட நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
வீடுகள், பாடசாலைகள், அலுவலகங்கள், வணக்கஸ்தலங்கள், பொது இடங்கள், கட்டுமானப் பணிகள் இடம்பெறுகின்ற இடங்களை எங்களுடைய சுகாதாரக்குழுக்கள் பார்வையிட்டு, நுளம்பு உற்பத்தியாகும் இடங்கள் இருக்கின்றனவா என்பதை பார்வையிட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த குழுக்களில், சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்களோடு, பொலிஸார், முப்படையினர், பிரதேச செயலகங்களை சேர்ந்த உத்தியோகத்தர்கள், அதே போன்று உள்ளூராட்சி உத்தியோகத்தர்கள் இந்த பணியில் இணைந்திருக்கின்றனர்.
இதன்போது, இனங்காணப்படுகின்ற அல்லது பொது இடங்களை அல்லது வேலைத்தளங்களை, துப்பரவாக்கி வெளியேற்றுகின்ற அந்த கழிவுகளை அகற்றுவதற்கு உள்ளூராட்சி திணைக்களங்கள் எங்களுக்கு ஒத்துழைப்பை வழங்குகின்றன.
யாழ். மாவட்டத்தை பொருத்த மட்டில் பத்து சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலே இந்த நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
எனவே, இந்தக்காலப்பகுதிகளிலே டெங்கு நோயினை கட்டுப்படுத்துவது பொதுமக்களின் கைகளிலேதான் இருக்கின்றது. அவர்கள் தங்கள் வீடுகள், வேலைத்தளங்கள், பொதுஇடங்கள். ஆகியவற்றை நுளம்பு பெருகாதவாறு துப்புறவாக வைத்திருக்க வேண்டும். தமது சுற்றாடலை துப்பரவாக வைத்துக்கொள்வதோடு, நுளம்பு உற்பத்தியாகக்கூடிய சிறிய நீர் கொள்கலன்களை அவர்கள் அழிக்க வேண்டும்.
முக்கியமாக சிரட்டைகள், இளநீர் கோம்பைகள், பொலுத்தின் பைகள் ,
ஐஸ்கிரீம் கப் போன்றவற்றை அழிக்கவேண்டும் மற்றும் தங்களுடைய வீட்டில் தேங்கி நிற்கும் பூச்சாடிகளிலே தண்ணீர் தேங்கி நிக்காதவாறு செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.