கோவிட் இடர் உதவி திட்டத்தை முன்னெடுத்துள்ள யாழ்.இந்துக்கல்லூரி
இலங்கையிலுள்ள தமிழ்ப் பாடசாலைகளில் ஒன்றாகத் திகழ்ந்து வருகின்ற யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, கோவிட்-19 மூன்றாவது அலை காரணமாக நாட்டில் தற்போது எழுந்துள்ள முடக்கல் நிலையால் அன்றாட சீவனோபாயத்தை இழந்து நிர்க்கதிக்குள்ளாகியுள்ள உறவுகளுக்கு உதவும் வகையில் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய வகையில் பாரிய உதவித் திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.
கல்லூரியின் நிர்வாகமும், இலங்கை உட்பட உலகின் பல நாடுகளில் இயங்கும் பழைய மாணவர் சங்கங்கள் உள்ளிட்ட யாழ் .இந்துக் கல்லூரி ஒட்டுமொத்த சமூகமும் பெரும் எண்ணிக்கையில் ஒன்றிணைந்து இதற்குத் தேவையான நிதியை தம்மிடையே திரட்டி இந்த உதவியை வழங்கியுள்ளனர்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் கடந்த வாரத்தில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு கட்ட பணிகள் மூலமாக இதுவரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உலர் உணவுப் பொதிகளைப் பெற்றுப் பயனடைந்துள்ளதுடன், இத்திட்டம் திருகோணமலை மற்றும் தமிழ் பேசும் சமூகங்கள் வாழ்கின்ற ஏனைய பகுதிகளுக்கும் முன்னெடுக்கப்படுவதற்கான ஏற்பாடுகளின் சாத்தியம் குறித்தும் ஆராயப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தை விட அந்த கல்லூரியும், பழைய மாணவர்களும் கல்வியை மேம்படுவதற்கான பல்வேறு நீண்ட காலச் செயற்திட்டங்களையும் நீண்ட காலமாக நாட்டின் பல்வேறு பிராந்தியங்களிலும் முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.