எரிபொருள் விநியோகத்தில் யாழ்.மாவட்ட செயலக அதிகாரியின் மோசடி
யாழ்.மாவட்ட செயலகத்திற்குட்பட்ட பகுதியில் காணப்படுகின்ற குளிர்பான நிலையம் ஒன்றிற்கு, நாள் ஒன்றுக்கு சுமார் 200 லீட்டர் டீசலை பெறுவதற்குரிய அனுமதியை யாழ்.மாவட்ட செயலக உயர் அதிகாரி ஒருவர் வழங்கியுள்ளமை அம்பலமாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, குளிர்பான நிலையம் ஒன்றினால் தமது தேவை கருதி சுமார் 200 லிட்டர் டீசலை வழங்குமாறு மாவட்ட செயலகத்திற்கு இந்த வியாபார நிலையம் கோரிக்கை விடுத்துள்ளதாக அறியக் கிடைக்கிறது.
குளிர்பான நிலையம்
யாழ்.மாவட்டத்திலும் இரு மாதங்களுக்கு மேலாக எரிபொருளுக்காக மக்கள் நீண்ட வரிசைகளில் காணப்படும் நிலையில் குளிர்பான நிலையத்திற்கு ஏன் முண்டியடித்துக் கொண்டு எரிபொருள் வழங்கினார்கள் என்ற கேள்வி எழுகிறது.
யாழ்.மாவட்டத்தில் சாதாரணமாக உற்பத்தி துறையில் ஈடுபடும் வியாபாரிகள் , நாளாந்த உணவு தயாரிப்பாளர்கள், முச்சக்கர வண்டிகளில் நடமாடும் வெதுப்பக பொருட்களை விற்பனை செய்வோர்,மரம் வெட்டும் கூலி தொழிலாளர்கள்,ஊடகத்துறையில்,தனியார் துறையினர் மற்றும் மீன் வியாபாரிகள் என நாளாந்த வருமானத்திற்காக ஏங்கித் தவிப்போர் எரிபொருளை பெற்றுக் கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.
யாழ்.மாவட்ட செயலகம்
நாட்டில் எரிபொருள் நெருக்கடி நிலைமை நீடித்து வரும் நிலையில் அரசாங்கத்தினால் கடந்த மாதம் முதல் அத்தியாவசிய சேவைக்கு மட்டும் எரிபொருள் விநியோகிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
எனினும் கடந்த 4ஆம் மாதம் முதல் யாழில் உள்ள குளிர்பான நிலையம் ஒன்றுக்கு நாள் ஒன்றிற்கு சுமார் 200 லீட்டர் டீசலை பெறுவதற்கான அனுமதியை மாவட்ட செயலக உயர் அதிகாரி ஒருவரால் வழங்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கு ரூபா 1000 முதல் 1500 ரூபாய் வரை விநியோகிக்கப்பட்டு வருகின்ற நிலையில் யாழ்.மாவட்ட செயலகம் எவ்வாறு அத்தியாவசிய சேவையில் உள்ளடக்கப்படாத குளிர்பான நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு பெருந்தொகை எரிபொருளுக்கு அனுமதி வழங்கிய பிண்ணனி என்ன?
யாழ் மாவட்டத்தில் தொடர்ச்சியாக எரிபொருளுக்கான நீண்ட வரிசை காணப்படுகின்ற
நிலையில் இவ்வாறு மேல் அதிகாரிகள் பொறுப்பற்ற முறையில் செயல்படுவது அவர்கள்
மீது பொதுமக்கள் நம்பிக்கையை இழப்பதாகவே அமையும்.



