யாழ். பொதுநூலக சிற்றுண்டிச்சாலைக்கு சீல் வைப்பு
யாழ். மாநகர பொது சுகாதார பரிசோதகரிற்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து கடந்த 09ஆம் திகதி யாழ். பொது நூலக சிற்றுண்டிச்சாலை பொது சுகாதார பரிசோதகரால் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
இதன்போது இனங்காணப்பட்ட குறைபாடுகள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டு நிவர்த்தி செய்ய கால அவகாசம் சிற்றுண்டிச்சாலை நடத்துனருக்கு வழங்கப்பட்டிருந்தது.
இதன்போது மீண்டும் பொது சுகாதார பரிசோதகரால் கடந்த 28ஆம் திகதி மீள் பரிசோதனை செய்த போது குறைபாடுகள் எவையும் நிவர்த்தி செய்யப்படாமல் இருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.
வழக்கு தாக்கல்
இதனைத்தொடர்ந்து பொது சுகாதார பரிசோதகரால் சிற்றுண்டிசாலை நடத்துனரிற்கு எதிராக யாழ் மேலதிக நீதவான் மன்றில் நேற்றுமுன் தினம் (29.09.2022) வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிற்றுண்டிச்சாலைக்கு சீல் வைப்பு
சிற்றுண்டிச்சாலை நடத்துனர் குற்றச்சாட்டுகளை ஏற்றுகொண்டதையடுத்து 60,000 ரூபா தண்டப்பணம் நீதிமன்றால் விதிக்கப்பட்டதுடன், சிற்றுண்டிசாலையினை சீரமைக்கும் வரை சீல் வைக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர்களால் சிற்றுண்டிச்சாலை மறு அறிவித்தல் வரை சீல் வைத்து மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.