ஆனைக்கோட்டை கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வு வழங்கப்படும்: வடக்கு ஆளுநர் உறுதி
யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டை - சாவல்கட்டு கடற்றொழிலாளர்களின் கோரிக்கைகளை ஆராய்ந்து அவர்களின் பிரச்சினைகளுக்கான உரிய தீர்வு வழங்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் உறுதியளித்துள்ளார்.
குறித்த கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள்
சிலர், பி.எஸ்.எம். சார்ள்ஸை,
யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (08.02.2024)
சந்தித்து தங்களின் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
இதன்படி காக்கைத்தீவு கடற்கரையில் தங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியை துப்பரவு செய்தல், கடற்றொழில் துறையை மேம்படுத்திக்கொள்வதற்கு உரிய அனுமதிகளை பெற்றுக்கொடுத்தல் போன்ற கோரிக்கைகளே இதன்போது கடற்றொழிலாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆளுநரின் உறுதி
அதனைத் தொடர்ந்து, ஆனைக்கோட்டை சாவல்கட்டு கிராம கடற்றொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சருடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் கூறியுள்ளார்.
அத்துடன், கடற்றொழில் துறையை துப்பரவு செய்வதற்கான தற்காலிக அனுமதியை பெற்றுக் கொடுப்பதாகவும், உள்ளூராட்சி மன்றத்தினூடாக மேற்கொள்ளக்கூடிய செயற்பாடுகளை உரியவகையில் முன்னெடுப்பதாகவும் ஆளுநர் உறுதியளித்துள்ளார்.
மேலும், அயல் கிராமங்களுடன் சினேகபூர்வமாக செயற்பட்டு, ஒன்றிணைந்த அழைப்பை விடுக்கும் பட்சத்தில் நேரடியாக களத்திற்கு வருகை தரவும் தாம் தயாராக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |