யாழ்.பல்கலைக்கழகத்தில் 16 மாணவர்களுக்குத் விதிக்கப்பட்டுள்ள தடை
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புதிய கல்வி ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அதாவது கடந்த ஒக்டோபர் மாதத்திலிருந்து இதுவரையான காலப் பகுதிக்குள் 16 மாணவர்களுக்குப் பகிடிவதையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.
இவற்றில் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிகபீடம், விஞ்ஞானபீடம் ஆகியவற்றில் தலா 4 மாணவர்களுக்கு ஆரம்பகட்ட விசாரணைகள் முடிவடையும் வரை பல்கலைக்கழகத்தின் அனைத்துச் செயற்பாடுகளிலும் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதுடன் விடுதிகளிலிருந்து வெளியேறுமாறும் பணிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகள்

அத்துடன் விஞ்ஞானபீடத்தைச் சேர்ந்த 2 மாணவர்களுக்கும், பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 6 மாணவர்களுக்கும் விடுதிகளில் தங்கியிருப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருப்பதுடன் உடனடியாக விடுதியிலிருந்தும் அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதேநேரம், சேர்.பொன்.இராமநாதன் அரங்காற்றுகை மற்றும் கட்புலக்கலைகள் பீடத்தைச்
சேர்ந்த 6 மாணவர்கள் மீதான விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன என்றும்,
குற்றம் நிரூபிக்கப்படுமிடத்து அவர்களுக்கும் வகுப்புத்தடை உட்பட அனைத்துச்
செயற்பாடுகளுக்குமான தடை விதிக்கப்படலாம் என்றும் அறியவருகின்றது.