பசிலுக்கு பாதுகாப்பை வழங்கியது தவறு-ஐ.மக்கள் சக்தி
மக்களின் எதிர்ப்பு காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கைவிட நேரிட்ட பசில் ராஜபக்சவுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கொழும்பு வரும் வரை முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு வழங்கப்பட்டமை தவறானது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ச தற்போது சாதாரண பிரஜை
இப்படியான சிறப்புரிமைகளை பெற பசில் ராஜபக்சவுக்கு தாரமீக உரிமை கிடையாது. இரட்டை குடியுரிமை காரணமாக பதவியில் இருந்து விலகிய அவர் தற்போது சாதாரண பிரஜை. நாட்டு மக்களுக்கு பயந்து அவர் இவ்வாறான பாதுகாப்பை கோரியிருக்கலாம்.
எனினும் அவ்வாறான பாதுகாப்பை வழங்குவது நியாயமானதல்ல. ஐக்கிய மக்கள் சக்தி இந்த விடயம் தொடர்பாக மேலதிகமாக எதனையும் பேசவில்லை என்றாலும் நாட்டு மக்கள் அதற்கான சரியான பதிலை விரைவில் வழங்குவார்கள் எனவும் ரஞ்சித் மத்தும பண்டார கூறியுள்ளார்.
நேற்று நாடு திரும்பிய பசில் ராஜபக்ச
அமெரிக்காவில் இருந்து நேற்று நாடு திரும்பிய பசில் ராஜபக்ச கடும் பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டார். நாடு திரும்பிய அவரை வரவேற்க பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள் உட்பட பலர் விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர்.