பிள்ளையானை இரகசியமாக சந்தித்த மகிந்த! மட்டக்களப்பு சிறைக்குள் இல்லாத ஆதாரம்..
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்று பிள்ளையானை சந்தித்ததாக கூறப்படுவது பொய்யான குற்றச்சாட்டு என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மகிந்த ராஜபக்ச மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்று பிள்ளையானைச் சந்தித்ததாக அசாத் மௌலானா சனல் 4 ஊடகத்தில் ஒரு பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்தார். மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள விசேட விருந்தினர் வருகைப் பதிவேட்டை ஒருமுறை சோதித்தாலே, யார் சிறைச்சாலைக்குச் சென்றார்கள் என்பது அம்பலமாகிவிடும்.
ஏன் அவரை கைது செய்யவில்லை?
இதற்கு இலங்கையிலேயே ஆதாரங்கள் இருக்கும்போது, எதற்காக ஷானி அபேசேகர தலைமையிலான அதிகாரிகள் பிரான்ஸ் செல்ல வேண்டும் என்ற சந்தேகம் எழுகிறது. அசாத் மௌலானா தற்போது பிரான்ஸில் இல்லை சுவிட்சர்லாந்தில்.
அசாத் மௌலானாவின் கருத்துகளை அப்பட்டமான பொய்கள் என உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் எஸ்.ஐ. இமா தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. அந்த ஆணைக்குழு அவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைத்திருந்தது.

இமா ஆணைக்குழுவின் இந்த அறிக்கையைச் செல்லுபடியற்றதாக்காமல், அந்த அறிக்கையைத் தூக்கி எறிந்துவிட்டு, பொதுமக்களின் பணத்தில் அந்தப் பொய்யனிடமே சென்று விசாரணை நடத்துவது எவ்வகையில் நியாயம்?
ஷானி அபேசேகர, அசாத் மௌலானா தற்போது வசிக்கும் சுவிட்சர்லாந்துக்குச் செல்லாமல், பிரான்ஸ் சென்றமைக்குக் காரணம், அந்த நாட்களில் அவருக்குப் பிரான்ஸில் ஏதோ ஒரு தனிப்பட்ட வேலை அல்லது மருத்துவச் சிகிச்சை தேவை இருந்திருக்க வேண்டும். அதை அரசுப் பணத்தில் நிறைவேற்றிக் கொள்ளவே இந்த விசாரணை நாடகம் அரங்கேற்றப்பட்டது.
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒரு குற்றவாளியைச் சந்திக்கச் சென்ற ஷானி அபேசேகர, ஏன் அவரை கைது செய்யவில்லை?

சாரா ஹசீம் சகோதரர் ரில்வானுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ரகசிய சிகிச்சை பெற்றுக்கொடுக்க உதவியமை, போலி அடையாளத்தில் இரண்டாவது திருமணம் செய்தமை, மணப்பெண்ணின் தந்தையை மோசடியான காசோலைகளை வழங்கி ஏமாற்றியமை, மற்றும் குடிவரவு-குடியகல்வு சட்டங்களை மீறி நாட்டை விட்டு தப்பிச் சென்றமை போன்ற பாரதூரமான குற்றச்சாட்டுகள் அசாத் மௌலானா மீது உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
பிரான்சில் உள்ள இலங்கை தூதரகம் என்பது இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்ட பகுதி. அங்கு சென்ற ஷானி அபேசேகரவுக்கு அவரைச் சட்டப்படி கைது செய்ய அதிகாரம் இருந்தும், அவரைச் சுதந்திரமாக விட்டுவிட்டு வந்ததன் மர்மம் என்ன எனவும் உதய கம்மன்பில கேள்வி எழுப்பியுள்ளார்.