உலக சுகாதார அமைப்பின் ஆலோசனையின் பேரில் செயல்படுவது இன்றியமையாதது! ரணில்
நாட்டில் கோவிட் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பின் ஆலோசனையின் பேரில் செயல்படுவது இன்றியமையாதது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜூம் தொழில்நுட்பத்தின் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் இந்த கருத்துக்களை தெரிவித்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி மறுசீரமைப்புத் திட்டம் குறித்து ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தெரிவிக்கும் வகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தற்போது மாவட்ட அளவில் மட்டுமே நடத்தப்படும் பி.சி.ஆர் சோதனைகளை மேலும் அதிகரிக்க வேண்டும். சிறிய இடங்களுக்கு ஒரு பி.சி.ஆர் நிலையம் போதுமானது.
எனினும், மொனராகலை போன்ற பெரிய இடங்களுக்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று பி.சி.ஆர் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
ஒரு வருடத்திற்கு முன்னர் குறிப்பிட்டதை போன்று தீவிர சிகிச்சை பிரிவுகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்திருந்தால், தற்போதைய சூழ்நிலையை எதிர்கொள்ள இது ஒரு பலமாக இருந்திருக்கும்.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் ஆலோசனையின் பேரில் செயல்படுவது இன்றியமையாதது என ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.