மத்திய கிழக்கில் போர் பதற்றம்! இலங்கையிலிருந்து வெளியேற தடுமாறும் வெளிநாட்டவர்களுக்கு அவசர அறிவிப்பு
மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டதால் நாட்டை விட்டு வெளியேற முடியாத வெளிநாட்டினரின் விசா காலத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தக் காலம் 07 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்றும், அதற்காக எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் கூறுகின்றார்.
வான்வெளி மூடல்
மத்திய கிழக்கின் இராணுவ நிலைமை காரணமாக வான்வெளி வழியாக இயக்கப்படும் அனைத்து விமானங்களையும் நிறுத்தி வைக்க இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, இலங்கையை விட்டு வெளியேற முடியாத பயணிகள் சிரமங்களை எதிர்கொள்வார்கள். இதைக் கருத்தில் கொண்டு, இந்த விசா நீட்டிப்புகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, அவர்கள் புறப்படும் ஏற்பாடுகள் செய்யப்படும் வரை அவர்கள் சிரமமின்றி நாட்டில் தங்க அனுமதிக்க பொருத்தமான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் பெரும் பதற்றம்
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நேற்று அதிரடி தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், இராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகின்றது.
அதன்படி, மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவ படைத்தளம் அமைந்துள்ள குவைத், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஓமன், ஜோர்டான் ஆகிய நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது.