காசா மற்றும் மேற்குக் கரையில் MSF அமைப்புக்கு இஸ்ரேல் அரசு தடை
காசா மற்றும் மேற்குக் கரையில் மருத்துவ சேவைகளை வழங்கி வரும் புகழ்பெற்ற சர்வதேச தொண்டு நிறுவனமான MSF அமைப்புக்கு இஸ்ரேல் அரசு தடை விதித்துள்ளது.
தமது ஊழியர்களின் பாதுகாப்பு தொடர்பான உத்தரவாதங்கள் வழங்கப்படாத வரை, காசாவில் பணிபுரியும் உள்ளூர் மற்றும் சர்வதேச பணியாளர்களின் பெயர்ப் பட்டியலை வழங்க முடியாது என MSF அறிவித்ததைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் அரசு
மனிதாபிமான அமைப்புகளின் போர்வையில் பயங்கரவாத ஊடுருவலைத் தடுக்கவே இந்த புதிய பதிவு நடைமுறைகள் கொண்டுவரப்பட்டதாகக் கூறும் இஸ்ரேல், MSF அமைப்பின் சில ஊழியர்களுக்கு ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை MSF வன்மையாக மறுத்துள்ளது.
இந்தத் தடையின் காரணமாக காசாவில் ஏற்கனவே முடங்கியுள்ள மருத்துவக் கட்டமைப்பு பெரும் சரிவைச் சந்திக்கும் என அஞ்சப்படுகிறது. காசாவில் உள்ள சுமார் 20 சதவீத மருத்துவமனை படுக்கைகளை MSF வழங்கி வருவதோடு, ஆண்டுக்கு 8 லட்சத்திற்கும் அதிகமான மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
கடும் கண்டனம்
போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 1,700க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அதில் 15 பேர் தமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் MSF தெரிவித்துள்ளது.

பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் கனடா உள்ளிட்ட பத்து நாடுகள் இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்தத் தடையால் மார்ச் 1, 2026-க்குள் MSF உள்ளிட்ட 37 சர்வதேச தொண்டு நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது, இது காசாவில் அத்தியாவசிய சேவைகள் கிடைப்பதில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.