ஹமாஸ் தலைவர்களை இஸ்ரேல் பழி வாங்கும்! கடும் எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல் பிரதமர்
ஹமாஸ் தலைவர்கள் எந்த நாட்டில் ஒளிந்து கொண்டாலும் இஸ்ரேல் பழி வாங்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கடந்த வாரம் கட்டார் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுத்த நிலையில், இஸ்லாமிய மற்றும் அரபு நாடுகளின் தலைவர்கள் அனைவரும் கட்டாரில் அவசர மாநாடு ஒன்றை முன்னெடுத்தனர்.
கட்டார் மீதான தாக்குதல்
செப்டம்பர் 9ஆம் திகதி இஸ்ரேலின் தாக்குதலானது அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இஸ்லாமிய, அரபு நாடுகளின் தலைவர்கள் கட்டாருக்கு முழு ஆதரவு அளித்துள்ள நிலையில், அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோ நெதன்யாகுவை சந்தித்து இஸ்ரேலின் கடுமையான நிலைப்பாட்டிற்கு வலுவான ஆதரவை அறிவித்தார்.
இருப்பினும், கட்டார் மீதான தாக்குதலில் அமெரிக்காவிற்கு உடன்பாடு இல்லை என்றே கூறப்படுகிறது.
இஸ்ரேலில் நெதன்யாகுவுடன் இணைந்து ஊடகங்களை சந்தித்த ரூபியோ, காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி ஹமாஸ் படைகள் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவித்து சரணடைய வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், இஸ்ரேல் கட்டாரைத் தாக்குவதற்கு முன்பு முன்கூட்டியே எச்சரிக்கப்படவில்லை என்று அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.
இஸ்ரேல் எச்சரிக்கை
மட்டுமின்றி, மற்ற நாடுகளைத் தாக்குவதில் இஸ்ரேல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய தாக்குதலில் தங்கள் நாடுகடத்தப்பட்ட காஸா தலைவரின் மகன் உட்பட ஐந்து உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
ஆனால் அதன் தலைமை உயிர் பிழைத்ததாக தெரிவித்துள்ளது. அதன் பாதுகாப்பு முகவர்களில் ஒருவரும் இறந்துவிட்டதாக கட்டார் குறிப்பிட்டுள்ளது.
1979 முதல் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் முன்னெடுத்து வரும் எகிப்து தெரிவிக்கையில், இஸ்ரேலின் நடவடிக்கைகள் எந்தவொரு புதிய சமாதான ஒப்பந்தங்களுக்கும் எந்தவொரு வாய்ப்புகளுக்கும் தடைகளை ஏற்படுத்துகின்றன.
மேலும் ஏற்கனவே உள்ளவற்றை கூட முறித்துக் கொள்ளத் தூண்டுவதாக தெரிவித்துள்ளது.



