காசா நிலப்பரப்பு தொடர்பில் இஸ்ரேல் பிரதமரின் அதிரடி உத்தரவு!
காசா நிலப்பரப்பின் 70 சதவீதப் பகுதியை இஸ்ரேலிய ராணுவத்தின் முழு ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருமாறு அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், ஹமாஸ் அமைப்பின் மீதான பிடியை இஸ்ரேல் மேலும் பலப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.
நாங்கள் ஏற்கனவே காசா பகுதியின் 60 சதவீத நிலப்பரப்பைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக இது 50 சதவீதமாக இருந்தது, தற்போது 60 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதனை படிப்படியாக மேலும் அதிகரித்து, முதற்கட்டமாக 70 சதவீத நிலப்பரப்பைக் கைப்பற்றுமாறு எனது ராணுவத்திற்கு நான் கட்டளையிட்டுள்ளேன்" என்று நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அவர் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது, மாநாட்டில் கூடியிருந்த மக்கள் காசா பகுதி முழுவதையும் இஸ்ரேல் கைப்பற்ற வேண்டும் என்று முழக்கமிட்டனர்.
ஏற்கனவே, கடந்த ஏப்ரல் மாத இறுதியில் சர்வதேச நிவாரணக் குழுக்களுக்கு இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) வெளியிட்ட வரைபடங்களின்படி, காசாவின் சுமார் 64 சதவீதப் பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது தெரியவந்தது.
தற்போது இஸ்ரேல் மேலும் பல பகுதிகளைக் கைப்பற்ற முற்படுவதால், அங்குள்ள சுமார் 20 லட்சம் பாலஸ்தீனியர்கள் ஏற்கனவே முற்றிலும் சிதைந்துபோன காசாவின் மிகச் சிறிய, சுருங்கி வரும் ஒரு பகுதிக்குள் முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 2025-ல் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புகளுக்கு இடையே எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேலியப் படைகள் "மஞ்சள் கோடு" (Yellow line) என்று அழைக்கப்படும் எல்லையை நோக்கிப் பின்வாங்கின.
இது காசாவின் சுமார் 53 சதவீதப் பகுதியை உள்ளடக்கியிருந்தது. இந்நிலையில், இஸ்ரேல் இந்த எல்லையைத் தாண்டி ஆக்கிரமிப்பைத் தொடர்வது குறித்து செவ்வாய்க்கிழமை குற்றம் சாட்டியுள்ள ஹமாஸ் அமைப்பு, "இஸ்ரேலின் இந்த நடவடிக்கை போர்நிறுத்த ஒப்பந்தத்தை திட்டமிட்டு சீர்குலைக்கும் செயலாகும் என தெரிவித்துள்ளது.
காசாவில் தனது ராணுவ பலத்தை நிலைநிறுத்தவும், அப்பகுதியில் அமைதியை ஏற்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் முறியடிக்கவும் இஸ்ரேல் வன்முறை மூலம் புதிய எல்லைகளைத் திணிக்கப் பார்க்கிறது என தெரிவித்துள்ளது.