இலங்கையில் மேலும் பல பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்!
இலங்கையில் நான்கு மாவட்டங்களின் 6 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, மாத்தறை மாவட்டத்தின் மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உயன்வத்த, உயன்வத்த வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் கண்டி மாவட்டத்தின் கடுகண்ணாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வலகம்பாய கிராம சேவகர் பிரிவில் கொஸ்கஸ்தன்ன பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
மாத்தளை மாவட்டத்தின் ரத்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடஹவிட்ட ஆகிய கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. புத்தளம் மாவட்டத்தின் கொஸ்வத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெதகிரியான கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, குருணாகல் மாவட்டத்தின் கும்புக்கெட்டே காவல்துறை அதிகார பிரிவுக்குட்பட்ட நிகதலுபொத கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கோவிட் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், நேற்றைய தினம் 2, 573 பேருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 128, 479 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், 26 கோவிட் மரணங்களும் பதிவாகியிருந்தன. இதன்படி, கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 827 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.